Thursday 2 January 2014

எனக்கு தமிழூட்டிய ஆசான்கள் (1)

திரு சடாக்ஷரம் 

எனக்கு தமிழ் மீது பற்று ஏற்பட காரணமாக இருந்த இரு பெரும் தமிழ் ஆசான்கள் திரு சடாக்ஷரம் மற்றும் "திஇரா" எனப்படும் திரு தி. ராமலிங்கம். மங்கை நல்லூர் கே எஸ் ஓ உயர் நிலை பள்ளியில் இருவரும் எனக்கு ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியர்கள்.

திரு சடாக்ஷரம் அவர்கள் எளிய மனிதர். நகைச் சுவை உணர்வு மிக்கவர். சிலேடை பேசுவதில் வல்லவர். தமிழில் மிகுந்த பற்று உள்ளவர். பள்ளியின் ஆண்டு விழாக்களில் சரித்திர நாடகங்கள் போடுவோம். ஒவ்வொரு ஆண்டும் ஓர் நாடகம் அதற்கு இவர் தான் திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதுவார். எனக்கு இருந்த கொஞ்சம் இசை திறமை என்னை அவர் அணியில் சேர்த்துக்கொள்ள உதவி செய்தது. பள்ளி நாடகங்களில் பின்னணி பாட எனக்கு அவர் பலமுறை வாய்ப்பு அளித்தார்.

1979ஆம் ஆண்டு. பள்ளி ஆண்டு விழாவில் திருப்பூர் குமரன் (கொடி காத்த குமரன்) நாடகம் போட்டோம். அது ஒரு இசை நாடகமாக அமைந்தது.  இன்றும் அந்த நாடகத்தின் பாடல் வரிகள் சில நேரங்களில் என்னையும் அறியாமல் நான் பாடுவது உண்டு. இந்த வலை பதிவை வாசிக்கும் உங்களுக்காக அந்த வரிகள் இதோ:

கதை களம் இதுதான். சுதந்திர போராட்ட வீரர்கள் கொடிகாத்த குமரனின் தலைமையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஊர்வலம் போகின்றனர். சாதாரணமாக இது போன்ற ஒரு சூழ்நிலையில் வீர வசனங்கள் பேசப்படும். திரு சடக்ஷரம் அவர்கள் இதற்கு ஒரு இசைக்  கோலம் போட்டார்.

பிரிட்டிஷ் சிப்பாய்

ஊர்வலம் செல்ல வேண்டாம் எங்கள் உத்தரவை மீறி சென்றால் மரணம் தான். ஊர்வலம் செல்ல வேண்டாம்.
வந்தே மாதரம் என்றே நீங்கள் வாய் கிழிய கத்தி என்ன பயன் கண்டீர் கட்டளை கேட்டிடுவீர் உமக்கு காசு பணம் பட்டம் கனமாக தருகிறோம் - கட்டளை கேட்டுடுவீர்

கொடிகாத்த குமரன்

பட்டம் பணம் எல்லாம் எங்களுக்(கு ஏ )ண்டா ஒங்க கொட்டம் அடக்கியே ஒட்டிடுவோண்டா 
கத்தி ரத்தம் இல்லாம கட்டுப்பாடா சேர்ந்து வந்து மொத்தமாக எதிர்த்து நிப்போம் வெள்ளைய ராஜா 
நீயும் மூட்டை கட்டி ஓட வேண்டும் இல்லையா ராஜா 
பட்டம் பணம் எல்லாம் எங்களுக்(கு ஏ )ண்டா ஒங்க கொட்டம் அடக்கியே ஒட்டிடுவோண்டா போடா போடா போ ......

திரு சடாக்ஷரம் அவர்களின் எளிய தமிழ் நடை எனக்கு கவிதை எழுத ஒரு ஊக்கம் கொடுத்தது.

திரு திஇரா அவர்கள் பற்றி பிறகு பேசுகிறேன்.