Monday 27 January 2014

சமூக வலை தளங்களின் அபாயம்

பிரச்சினைகளுக்கு காரணமாகும் சமூக வலைதளங்கள்- அண்மைக்கால சோக நிகழ்வுகள் ஆதாரம்

 
மனித உறவுகளின் தொடர்பை மேம்படுத்துவதற்காக வந்த சமூக வலைதளங்கள், இன்று பல் வேறு பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது. அந்தரங்க விஷயங்களை நிமிடத்துக்கு நிமிடம் சமூக வலை தளங்களில் பகிர்வதால் ஏற்படக் கூடிய விபரீத பின்விளைவுகளைப் பற்றி நம்மில் பலரும் சிந்தித்ததாக தெரியவில்லை. இதற்கு சமீபத்திய உதாரணம், மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் பரிதாபமான முடிவு.
 
சுனந்தா புஷ்கர் மரணமடைந்ததற்குகூட அவரது ட்விட்டர் பக்கத்தில் நடந்த சண்டைச் சச்சரவு களைத்தான் காரணமாக சொல்கிறார்கள். இது ஒருபுறமிருக்க பேஸ் புக்கில் சிலர் தங்களது அன்றாட நடவடிக்கைகளைகூட ஸ்டேட்டஸாக போட்டு வருகிறார்கள். சில வசதியான இளைஞர்கள், அப்பா விலையுயர்ந்த கார் பரிசளித் தார், ஐ-போன் வாங்கித்தந்தார்.. என்பது போன்ற ஸ்டேட்டஸ்களை போடுவதை வழக்கமாக வைத்துள் ளார்கள். இதை கவனிக்கும் சிலர் சம்பந்தப்பட்ட நபரை கடத்தி பணம் பறிக்கும் வேலைகளில் ஈடுபடவும் வாய்ப்புகள் அதிகமுள்ளது.
 
சில மாதங்களுக்கு முன்னர் சென்னை பள்ளிகரணையைச் சேர்ந்த சித்ரா (பெயர் மாற்றப்பட் டுள்ளது) என்ற பெண், வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந் தார். போலீஸ் விசாரணையில், ‘நான் வீட்டில் தனியாக இருக்கிறேன்’ என்ற அவரது ஸ்டேட்டஸை பார்த்த அவரது பேஸ் புக் நண்பர்கள் இருவர் வீட்டுக்கே வந்து அவரை பலாத்காரம் செய்து கொலை செய்தது வெளிச்சமானது.
 
மேலும் வேலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணை பல மாதங்களாக காதலித்தார். காதலி கேட்டபோதெல்லாம் ஆயிரக்கணக்கில் பணத்தையும் வாரி இறைத்தார். நேரில் சந்திக்க வேண்டுமென்று அந்த இளைஞர் கேட்க, ஒரு சில நாட்களில் அந்த பெண்ணின் ஐ.டி.யே மாயமானது. இதில் மன உளைச்சல் அடைந்த அந்த இளைஞர் தற்கொலை வரை சென்று மீண்டுள்ளார்.
 
இந்தப் பிரச்சினைகள் குறித்து சைபர் கிரைம் குற்றப்பிரிவின் முன்னாள் கூடுதல் கண்காணிப்பாளர் எஸ். பாலு கூறுகையில், “பேஸ்புக், ட்விட்டரை பயன்படுத்துபவர்கள் முன் பின் தெரியாதவர்களை நண்பராக்கி கொள்ளக்கூடாது. தெரிந்தவரிடமிருந்து நட்பு வேண்டுகோள் வந்தாலும், அந்த பக்கம் உண்மையிலேயே அவருடையதுதானா என்பதையும் சோதிக்க வேண்டும். முக்கியமாக ஸ்டேட்டஸ் போடும்போது கவனமாக இருக்கவேண்டும்” என்றார்.
 
2012-ம் ஆண்டின் கணக்கெடுப் பின்படி சமூக வலைதளங்களில் 147 கோடி பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த எண்ணிக்கை 2013-ம் ஆண்டின் இறுதியில் 173 கோடியாக உயர்ந்திருக்கிறது. உலகில் நான்கில் ஒருவர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவ தாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
 
முழுக்க முழுக்க மனித உறவையும், தொடர்பையும் மேம்படுத்து வதற்காக வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் கடந்த கால சம்பவங்கள் சிலவற்றை வைத்து பார்க்கும் போது சமூக வலைதளங்களால் பிரச்சினைகளே அதிகம் என்பது உறுதியாகிறது.
 

(ஆதாரம் : தி ஹிந்து,  தமிழ் நாளேடு - 27-01-2014)
 
இதற்கு தீர்வு தான் என்ன? நம் குழந்தைகளுக்கு நாம் நல்ல பழக்க வழக்கங்கள் சொல்லித் தருகிறோம். பெரியவர்களிடம் எப்படி பழகுவது, வெளி மனிதர்கள் முன் எப்படி நடப்பது என்பது தொடங்கி thanks, excuse me போன்ற basic manners சொல்லி கொடுக்கிறோம். ஆனால் இணையத்தின் சாதக பாதகங்களை பற்றி நமக்கும் தெரிய வில்லை நாம் நமது அடுத்த தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுக்கவும் முயல்வதில்லை.

Google, Wikipedia போன்றவை ஒரு வரப் பிரசாதம். பெரியவர்கள் நாமே முதலில் தகவல் பாதுகாப்பின் அவசியத்தை உணர வேண்டும். நிறைய செய்திகள் தகவல் பாதுகாப்பு பற்றி இணையத்தில்  உள்ளது. நமக்கு தேவையான விஷயத்தை நாம் தேடி தெரிந்து கொள்ள முனைய வேண்டும். இணைய தளத்தை சரிவர கையாள தெரியாமல் இன்று பிறருக்கு ஏற்படும் சங்கடம்  நாளை நமக்கோ நம் குடும்பத்தினருக்கோ ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 
இன்றைய இளைய தலைமுறை 2-3 வயது முதற்கொண்டே smart phones, ipad, laptop முதலியன கையாள்வதில் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனது பேத்தி இஷான்வி ipad கையாளும் அழகை காண கண் கோடி வேண்டும். அப்போது அவளுக்கு வயது 2 தான்.

யுவ/ யுவதிகள் சதா சர்வ காலமும் facebook, twitter போன்ற சமூக வலை தளங்களில் பழியாக கிடக்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக இணைய தளத்தை எப்படி உபயோகிப்பது என்பதை கற்றுத் தரவேண்டிய பொறுப்பு நம்முடையதுதான். ஏனெனில் தகவல் பாதுகாப்பு என்பது பள்ளி கல்லூரிகளில் பாடமாக சொல்லித் தரப்படுவது இல்லை. மனிதன் தோன்றி பல மில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. பல புரட்சிகள் (revolutions) மனித இனம் சந்தித்துள்ளது. இவற்றில் மிக உன்னதமானதும் மிக ஆபத்தானதும் தகவல் தொழில் நுட்பப் புரட்சி (information technology revolution) தான்.

2020-இல் மனித இனம் ஒரு பேரழிவை சந்திக்க வேண்டி உள்ளது என தகவல் பாதுகாப்பு வல்லுனர்கள் கூறுகின்றனர். "கத்தி இன்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது" என பாரதி சொன்னது இங்கு எனக்கு நினைவுக்கு வருகிறது. என்ன மாதிரியான பேரழிவு இது?
 
 எனது கருத்து தி இந்து செய்திதாளின் இணைய தளத்தில் பிரசுரமானது :

Return to frontpage
 
SREEMUKY from Chennai                                                                
மனித குலம் சந்தித்த புரட்சிகளில் மிக உன்னதமானதும், வலிவானதும், ஆபத்தானதும் தகவல் தொழில் நுட்ப புரட்சி தான். அது நம் தினசரி வாழ்வில் ஊடுருவிய விதம் நமக்கு யோசிக்க கூட அவகாசம் இல்லாமல் போனது. கை பேசியும் இணையதள இணைப்பும் இல்லை என்றால் நமது இளைய தலைமுறை பைத்தியம் பிடித்து செய்வது அறியாமல் திகைத்து நிற்கும். இத்தகைய இன்றியமையாத ஒன்றை கையாளும் பொழுது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். முக நூலில் நாம் பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு செய்தியும் நாம் உதிர்க்கும் வார்த்தைகள் போல. ஒரு முறை எழுதிவிட்டால் பிறகு அது நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்காது. மேலும் அந்த செய்தி எங்கெல்லாம் செல்கிறது, யாரெல்லாம் படிக்கிறார்கள், எப்படியெல்லாம் மற்றவர்களுக்கு பகிரப் படுகிறது என்பது நமக்கே தெரியாது. எனவே இளைய தலைமுறையினருக்கு தகவல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை அளிப்பது நமது கடமையாகும்.
about 23 hours ago ·  
 

மீண்டும் பேசுவோம் 



Sunday 26 January 2014

பாவங்கள்

பாவங்கள் 

 பொய், புளுகு, பித்தலாட்டம், புறம் பேசுவது, ஏமாற்றுவது என்பதெல்லாம் பாவங்கள் என்று நம் பெரியோர்கள் சொல்லி இருக்கின்றனர். பாவங்களில் பெரிய பாவம் துரோகம் செய்வது. நம்பிக்கை துரோகம் செய்தவர்க்கு குரூர திருப்தியை தரலாம் என்றாலும் அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும். நமக்கு உண்டாகும் நன்மை தீமைகளுக்கு நாமே பொறுப்பு. சில வேளைகளில் பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்கள் நம்மை தொடர்வதாகவும் தோன்றும். ஆனாலும், இந்த ஜென்மத்தில் நாம் குறைந்த பட்சம் ஒரு மனிதத்துவதுடன் நடந்து கொண்டாலே போதும். நமது பாவக் கணக்கு சேராமல் பார்த்துக் கொள்ளலாம். ஒரு பாவத்திற்கு பரிகாரம் என்பது நமது மன சாந்திக்காக வேண்டி இருக்கலாமே தவிர அதுவே மாற்றாக முடியாது.
 
எல்லா தர்மங்களும் பாவத்தின் சம்பளமாக மரணத்தை காட்டுகின்றன. அந்த மரணம் சிலருக்கு சுலபமாகவும், சிலருக்கு மிகுந்த சிரமத்துடனும் மேலும் சிலருக்கு எப்போது வாய்க்கும் வந்தால் நல்லது என்று ஏங்க வைக்கும்.

பாவத்திற்கு செய்யப்படும் பரிகாரம் நமது பாவத்தின் தீவிரத்தை 10-20% மட்டுமே குறைக்கக் கூடும். மீதி 80% பாவம் நம் கணக்கில் வரவில்தான் இருக்கும். நாம் செய்யும் நல்ல காரியங்கள் நமக்கு பயன் தருவதை விட நம் சந்ததியருக்கு தான் அதிக பயன் தரும். ஆனால் நாம் செய்யும் பாவத்திற்கு நாமே பொறுப்பு.

என்னடா இவன் பெரிய பெரிய வார்த்தைகளை சொல்கிறானே என நினைக்க  வேண்டாம். இங்கு நான் சொல்வது எல்லாமே என்னுடைய கருத்துக்கள் தான்.   வாசிப்பவருக்கு இதில் மாற்றுக் கருத்து இருக்கலாம், இருக்கும் என்பதை நான் அறிவேன்.

துரோகம் என்பது நாம் பிறருக்கு இழைக்கும் பொழுது நமக்கு அது சரியென்று தோன்றும். மூன்றாவது மனிதர் மற்றொரு மனிதருக்கு செய்யும் பொழுது நமக்கு அது சில சமயம் தவறுபோலவும் சில சமயம் சரி என்றும் தோன்றும். நாம் பாதிக்கப் படும் பொழுது அல்லது அந்த காட்சியில் நாமும் ஒரு பாத்திரமாக இருக்கும் பொழுது அது மாபெரும் தவறாக தோன்றும். பிறரை நாம் நிந்திக்கும் அல்லது குற்றம் சொல்லும் பொழுது சம்பந்தப் பட்டவரின் நிலையில் நம்மை இருத்தி நமது திருவாயை திறக்கும் முன் ஒன்றுக்கு பலமுறை யோசித்தல் நலம்.

மரியாதை என்பது பயத்தால் வந்தால் அது போலியானதாக இருக்கும்.ஆத்மார்த்தமாக மனதின் அடி ஆழத்திலிருந்து அது வர வேண்டும். அன்பும் அப்படித்தான். நேரில் பார்க்கும் பொழுது ஒரு பேச்சு, பின்னால் ஒரு பேச்சு என்று இருந்தால் அந்து உண்மையான அன்பாக முடியாது. "கெட்டிக்காரன் புளுகு எட்டுநாள்" என்று சொல்வார்களே அது போலத்தான்.
 
காட்டில் வலிமையான மிருகம் பிற மிருகங்களை அடக்கி ஆளும். சமூகத்தில் பெரிய ரௌடி, தாதாவாக இருப்பவர் பிறரை பயமுறுத்தி அடக்க நினைப்பார். பெரிய குடும்பங்களில் வாரிசுகளில் சிலர் பண பலம் மிக்கவராக இருக்கும் பட்சத்தில் அவரது சொல், ஆதிக்கம் மேலோங்கி நிற்கும். அவரது பேச்சுக்கு யாரும் எதிர் பேச்சு பேச மாட்டார்கள். இதுவே அவர்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு தனக்கு அந்த குடும்பத்தில் பெரிய செல்வாக்கு இருப்பதாக இறுமாந்து கொள்வார்கள். பிறர் அமைதி காப்பதற்கு காரணம் பல இருக்கலாம் - நாயை அடிப்பானேன் என்று ஒதுங்கி இருக்கலாம். அல்லது விநாசகாலே விபரீத புத்தி - அவரர் செய்யும் பாவம் அவர்கள் அனுபவிப்பார்கள் என்று எண்ணி அமைதியாக இருக்கலாம்.
 
ஆனாலும்  தவறு செய்பவர்களுக்கு இருக்கும் இறுமாப்பும், அகந்தையும், ஆணவமும் அவர்கள் புத்தியை மறைத்து விடும். பிறர் தன்னிடம் பயப்படுவது போல் தோன்றுவது அல்லது தான் எது சொன்னாலும் அங்கு மறுபேச்சு இருப்பதில்லை என்ற எண்ணம் இவர்களை மேலும் மேலும் இதுபோன்ற துஷ்ட செயல்களை செய்யத் தூண்டும்.

பணக்காரன் செய்யும் துரோகம் சமூகத்தை ஏமாற்றி பணம் சேர்ப்பது. அவ்வாறு சேர்த்த பணத்தை கொண்டு பிறகு சமூக சேவைகள் செய்தால் தான் செய்த பாவங்கள் சரி செய்யப்படும் என்று தனக்கு தானே சப்பைக்  கட்டு கட்டிக் கொள்வது. அரசியல் வாதிகள் செய்யும் துரோகம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அவரை முள் படுக்கையில் கிடத்தும். மேலும் சிலர் மனசாட்சிக்கு துரோகம் செய்வர். அவர் மனம் தான் செய்வது தவறு என்பதை சுட்டிக் காட்டும் ஆனாலும் அவரது அகம்பாவம் அதற்கு ஒரு பொய்யான காரணம் கற்பித்து மனம் சொல்வதை மழுங்க அடிக்கும். போகப் போக மனது மௌனம் சாதிக்க ஆரம்பித்து அகம்பாவ சுபாவம் மேலோங்கி மேலும் மேலும் அவரை பிறருக்கு தீங்கு செய்விக்க தூண்டும்.

ஆனாலும் வினை விதைத்தவன் வினை அறுத்துத் தான் ஆகவேண்டும். பிறருக்கு துன்பம் செய்யும் பொழுது அதனால் ஏற்படும் பாதிப்புகள்  பூமராங் போல செலுத்தியவரை தாக்கும் வல்லமை கொண்டது. பெற்றவர் செய்யும் பாவம் பிள்ளைகளை தாக்கும். பிறருக்கு நாம் ஒரு தீங்கு செய்ய முனையும் பொழுது கொஞ்சம் தனது பிள்ளைகளை நினைத்துக் கொள்வது நல்லது. ஒன்றுக்கு நூறு முறை யோசித்து செய்வது உத்தமம். கோபத்தில், ஆத்திரத்தில், அவசரத்தில் நாம் செய்யும் எந்த செயலும்  நமக்கு எதிராகவே திரும்பும். அப்போது அறிவு செயலிழந்து இருக்கும்.

நம் வாயை விட்டு உதிரும் தீய சொற்களுக்கு நாம் எஜமானர் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஒளி வட்டம் (aura ) உண்டு, கடவுளர் படத்தில் பின்னால் தெரியுமே அதுபோல. நாமும் கடவுள்தான் நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும் நம்முடன் இருக்கும் வரை. நமது உள்ளத்தில் எழும் தீய எண்ணங்கள் நமது ஒளிவட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக இருளடைய வைக்கும். வலைப் பதிவை நிறைவு செய்யும் முன் நம்பிக்கை துரோகம் பற்றி ஒரு குட்டிக் கதை ஒன்று கூறி நிறைவு செய்கிறேன்.

வறுமையை காரணம் காட்டி ஒரு குட்டி ஆடு பெற்றோரை ஏமாற்றியது. சிறு வயதில் குட்டி ஆடு உடல் சுகவீனப் பட்டு சிறிது ஊனமுற்றது. பாவ பரிதாபப் பட்டு குட்டி ஆட்டுக்கு பெற்றோர் அதிக சலுகையும் அன்பும் காட்டினர். உடன் பிறந்த ஆடுகளும் குட்டி மீது பிரியம் கொண்டு இருந்தன. குட்டி ஆடு இந்த சலுகையை நிரந்தரமாக பெற இல்லாத தில்லு முல்லுகளை செய்தது. பெற்றோரையும் மற்றவரையும் எளிதில் ஏமாற்றியது. கொஞ்ச நாள் கழித்து குட்டி ஆட்டுடன் ஒரு குள்ள நரி ஜோடி சேர்ந்தது. குள்ளநரி பொய்யும் புளுகும் சொல்லி குட்டி ஆட்டின் பெற்றோரை ஏமாற்ற ஆரம்பித்தது.

குள்ளநரியின் கையாலாகத்தனம் குட்டி ஆட்டை வறுமைக்கு தள்ளியது. இந்த முறை குட்டி ஆடு வறுமையை சொல்லி பெற்றோரிடம் அழ, பெற்றோரும் உடன் பிறந்த மற்றோரும் குட்டி ஆட்டுக்கு உதவி செய்ய  ஆரம்பித்தனர். குள்ளநரி தனது குணத்தை மறைத்து ஆட்டுத் தோல் போர்த்தி தானும் ஒரு நல்ல ஆடு போல வளைய வந்தது.

ஆட்டின் சுற்றம் கண்மூடித் தனமாக குட்டி ஆட்டை ஆதரித்து குட்டி ஆட்டின் பேச்சை கேட்டு பாவம் பரிதாபம் பார்த்து உருகியது. நரியின் உண்மை தெரிந்த ஓரிரு ஆடுகள் விலகி நின்று நடக்கும் நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்தது. விலகிய சுற்றம் மேல் அடுக்கடுக்காக  குற்றம் சுமத்தி ஆடும் நரியும் ஆட்டம் போட்டன. சந்தர்ப்பத்தை பயன் படுத்தி ஆட்டின் பெற்றோரையும் சுற்றத்தையும் ஏமாற்றி செல்வமும் சொத்தும் சேர்த்தன. உழைத்த காசே ஒட்டாத இந்த காலத்தில் ஏமாற்றி சேர்த்த காசு என்ன செய்யும்? ஆடு செய்த பாவம் எனும் பூமராங் திரும்பி வந்து ஆட்டை தாக்கியது. நரிக்கோ ஏகப்பட்ட சந்தோசம். நல்ல வாய்ப்பு கிடைத்தது, கறக்க முடிந்தவரை செல்வம் கறக்க  முடிவு செய்தது.

ஆட்டின் குடும்பத்தை நரி உணர்வு பூர்வமாக தாக்கியது. எப்போது பார்த்தாலும் இல்லை பாட்டு பாடி முடிந்தவரை செல்வம் சேர்த்தது. குட்டி ஆடு அல்பாயுசில் போக, நரி தனது உண்மை உருவத்தை காட்டியது. ஆட்டின் குடும்பத்துடன் உறவை துண்டித்துக் கொண்டு கடவுள் பெயரை சொல்லி சாமியாரைப் போல நாடகம் ஆடியது. உண்மை உணர்ந்த ஆட்டின் குடும்பமோ  செய்வது அறியாது திகைத்து நின்றது.

நரிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இவ்வளவு சீக்கிரம் அதன் சாயம் வெளுக்கும் என்று அது நினைத்துக் கூட பார்க்கவில்லை. தான் சாமியார் ஆகி விட்டதாகவும் இனி தனது குட்டிகளை சுற்றம் தான் கரையேற்ற வேண்டும் என்று கட்டளை இடும் தொனியில் சொல்லி தப்பிக்க முயன்றது. சுற்றம் செய்வதறியாது திகைத்தது. கடைசி வரை நரி உணரவே இல்லை அது செய்த பாவங்களும் நம்பிக்கை துரோகமும் அதன் குட்டிகளை தாக்கும் என்று. நரி அப்பொழுதும் தனது சுயநலத்தையே யோசித்தது. உதவிய ஆடுகளோ ஒன்றும் செய்யத் தோன்றாமல் திகைத்து நின்றன.
 
நீதி :
ஏமாற்றுபவன் குற்றவாளி என்றால், ஏமாறுபவனும் குற்றவாளிதான்.



மீண்டும் பேசுவோம் 

Friday 24 January 2014

நாம் மறந்தவை (2) - மஞ்சப்பை

மஞ்சப்பை 

 
மஞ்சப்பை  பற்றி சொல்ல வேண்டும் என்ற ஒரு ஆவல். இது இன்றைய தலைமுறைக்கு தெரியாத அல்லது தெரிவிக்கப்படாத ஒரு செய்தி. 1970-80 களில் துணிக்  கடைகள் மற்றும் வேறு பெரிய கடைகளில் பொருட்கள் வாங்கும் பொழுது இலவசமாக ஒரு மஞ்சப்பை தரப்படும். மஞ்சள்  மருத்துவ குணம் நிறைந்த ஒன்று, நல்ல கிருமி நாசினி என மஞ்சளுக்கு பல மகிமைகள் இருந்தாலும் மஞ்சள் என்பது மங்களகரம் என்று நம்மால் நம்பப்  படுகிறது. அதனால் தான் எப்போதும் புது துணி உடுத்தும் முன் மஞ்சள் தடவி உடுத்துகிறோம்.  மேலும் மஞ்சள் நிறம்  தெரியக்  கூடியது.மஞ்சள் நிறத்தில் பை செய்து அதில் அந்த கடையின் பெயர் மற்றும் முகவரி அச்சடிக்கப் பட்டிருக்கும். இலவசம் தந்தது போலும் ஆனது அதே சமயம் கடைக்கு விளம்பரம் செய்தது போலும் ஆகிவிடும்.
 
நான் எங்கள் கிராமத்தில் நடுநிலைப் பள்ளி (middle school) படித்த காலத்தில், மயிலாடுதுறை கொழும்பு ஸ்டோர் கொடுத்த மஞ்சள்   பையில் தான் slate மற்றும் பாட புத்தகங்கள் எடுத்து செல்வேன்.
 
அப்போதெல்லாம் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை பாடம் எழுத நோட்டுப் புத்தகம்  கிடையாது.வெறும் slate தான், அதுவும் கல் slate. கடப்பா கல் என்று இப்போது சமையல் அறை மேடைக்கு போடுகிறோமே அதே போல இருக்கும் ஆனால் அவ்வளவு வலிமையானது இல்லை. கீழே போட்டால் கல் slate உடைந்து விடும்.
 
slateஇல் எழுத குச்சி - ஒன்று கல் குச்சி மற்றொண்டு பால் குச்சி. கல் குச்சி கொஞ்சம் வெளிர் வெள்ளை நிறத்தில்  எழுதும். slate  கருப்பு நிறம் ஆதலால் கல் குச்சியில் எழுதப்படும் எழுத்து சிறிது மங்கலாக தெரியும். ஆனால் பால் குச்சியோ பளீர் என்று வெள்ளை நிறத்தில் எழுதும். கல் slate நன்றாக பாதுகாப்பாக வைத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் நீண்ட நாள் உபயோகப் படக் கூடியது. மழை வெய்யில் எதுவானாலும் கவலை இல்லை. slateக்கு பாலிஷ் போடுவது என்பது ஒரு பெரிய கலை.
 
கிராமத்தில் வேலிகளில் படர்ந்து இருக்கும் கோவை இலையை பறித்து நான்கு  கோவை இலைகளை மடக்கி slate இல் வைத்து தேயக்க slate கருமை நிறத்தில் பளபளக்கும். நல்ல பளபள slate வைத்திருப்பவன் நல்ல படிப்பாளி என்ற ஒரு மாயையை உருவாக்கும். ஏனென்றால் பால் குச்சி கொண்டு அந்த பாலிஷ் பண்ணிய slate இல் எழுதும் பொழுது எழுத்துக்கள் பளீர் என்று இருக்கும். வாத்தியார் மிக நன்று (very good) என சொல்லுவார். நடு நிலைப் பள்ளியில் நான், பட்டாபி, ரவி மற்றும் முத்து இரத்தின வேல் நால்வரும் slate  பளபளக்க வைப்பதில் போட்டி போடுவோம்.
 
மஞ்சப்பை பற்றி பேச ஆரம்பித்து நாம் எங்கோ சென்று விட்டோம். நாங்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில் பெற்றோருக்கு படிப்பு செலவு என்பது மிக குறைவு. ஒரு கல் slate அதற்கு ஒரு பெட்டி பால் குச்சி, ஒரு மஞ்சப்பை இவ்வளவு தான். இன்று இருப்பது போல Pre -KG முதல் முதுகில் மூட்டை தூக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு முறை ஒரு மஞ்சப்பை எங்களுக்கு தரப்பட்டால் குறைந்தது ஒரு வருடமாவது அதை வைத்துக் கொள்ள வேண்டும். இடையில் அது கிழிந்து விட்டாலோ அல்லது காணாமல் போய் விட்டாலோ அவ்வளவுதான். வகுப்பில் குறைந்தது 10 பேராவது மாயவரம் கொழும்பு ஸ்டார்  பை வைத்து இருப்போம். அவரவர் பைக்கு ஒவ்வொரு அடையாளம் இடப்பட்டிருக்கும்.
 
பள்ளிக்கு மட்டும் அல்ல துணிப் பை வேறு பல வடிவங்களிலும் அளவுகளிலும் வீடுகளில் இருக்கும். காய்கறி மற்றும் மளிகை சாமான்கள்  வாங்கச்  செல்லும் பொழுது பெரிய அளவு (size) துணிப்பை எடுத்துச் செல்லப் படும். துணிப்பை மக்கும் தன்மை உள்ளது. அதனால் இயற்கைக்கு கேடு இல்லை. மேலும் அது அழுக்கு ஆகும் பொழுது சிறிது சோப்பு போட்டு தோய்த்து அதை புதிது போல வைத்துக் கொள்ளலாம். நீண்ட நாள் உழைக்கக் கூடியது.
 
சமீபத்தில் முகநூளில் (facebook) எனது தம்பியின் (Cousin) மனைவி திருமதி கீதா ஸ்ரீகாந்த் அவர்கள் ஒரு படம் ஒன்றை போட்டிருந்தார். அந்த படமும் அதன் சார்ந்த செய்தியும் எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. சென்னையில் ஒரு பசுமாட்டின் வயிற்றில் இருந்து கிலோ கணக்கில் பிளாஸ்டிக் கழிவு எடுக்கப்பட்டது என்று.
 
யோசித்து பார்க்கையில் நாம் எந்த அளவு இயற்கையை நேசிக்கத்  தவறி விட்டோம் என்பது நிதர்சனமாக புரிந்தது. நமது சௌகரியத்திற்காக பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதில் ஆர்வம் கட்டுகிறோம். நம்மால் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் எளிதில் மக்கக் கூடியவை அல்ல. அது நமது நிலத்தின் தன்மையை மாற்றக்கூடியது. மேலும் மாடு போன்ற விலங்குகள் அதை உண்ண நேரும் பொழுது அவற்றால் அது ஜீரணிக்கப் படாமல் அவை நோய்வாய்ப் படுகின்றன. அந்த நோயுற்ற மாட்டின் பால் தான் நாம் நமது குழந்தைகளுக்கு கொடுக்கிறோம்.
 
"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்" வள்ளுவனின் வாக்கு
 
நாம் செய்யும் தவறு நம்மையே வந்து தாக்குகிறது. இனியொரு முறை இந்த தவறை நாம் செய்யோம். நம் பூமித்தாய்க்கு நாம் செய்யும் ஒரு சிறு தொண்டாக கருதி பிளாஸ்டிக் பை உபயோகிப்பதை சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டு  அதை அறவே தவிர்ப்போம்.
 
முடிக்கும் முன் ஒரு செய்தி. மஞ்சள் பை கொண்டு வருபவன் மக்கான் அல்ல  அவன் அறிவாளி. பிளாஸ்டிக் பை உபயோகிப்பவன் தான் அறிவிலி. நாமும் நம்மை சார்தவர்களும் அறிவாளிகளாக மாறுவோம். நம் தாய்க்கு செய்யும் தொண்டாக பிளாஸ்டிக் பை உபயோகிப்பதை தவிர்ப்போம்.
 
மீண்டும் சிந்திப்போம் 

Thursday 23 January 2014

நாம் மறந்தவை

மண் பாண்டம் 

எங்களது இளமை காலம்  கிராமத்தில் கழிந்தது. இன்றைய  கலாச்சாரமும் ஆடம்பரங்களும் இல்லாத  ஒரு கால கட்டம்  அது.  மண்ணால் ஆன சட்டி, பானைகள் மற்றும்  வேறு பல பொருட்கள் வீடுகளில் புழங்கப்பட்ட காலம் அது. வெயில் காலங்களில் மண் பானையில் வெட்டி வேர் போடப்பட்ட தண்ணீர் தாகம் தணித்ததுடன் உடலுக்கு குளிர்ச்சியும்  தந்தது. சரும பிரச்சினைகள் உண்டாகாமல் தடுத்து, வெயில் காலங்களில் ஏற்படும்  கோடை கட்டி மற்றும்  அம்மை நோய்களில் இருந்தும் பாதுகாப்பு தந்தது. இன்றோ நாம்  குளிர்ச் சாதனப்  பெட்டியில் இருந்து தண்ணீர் மற்றும் பூச்சி கொல்லி கலந்த உற்சாக பானங்களை அருந்துவதை நாகரீகமாக கருதுகிறோம். நமக்கு பண விரயம் மட்டும் அன்றி சுகாதார கேடு விளைவிக்கும். சமீபத்தில் இணைய தளத்தில் நான் படித்த ஒரு கட்டுரையை உங்களுக்காக இங்கு அளிக்கிறேன்.
 
"Quote"
"தம் பிரியாணி" –  இன்று ஹோட்டலுக்கு சென்றவுடன் நாம் ஸ்பெஷலாக ஆர்டர் செய்யும் ஒரு உணவு. இந்த ஹோட்டல்ல இது ரொம்ப பிரசித்தி, சமைச்ச மண் பானையோடு கொண்டுவந்து வைப்பான் பாருங்க அதன் மணம், டேஸ்ட் எல்லாமே தனிதான். அதேபோல இன்று கிராமத்து சமையல் என தொலைக்காட்சிகளிலும் கூட பாட்டு பாடற பாட்டி வந்து பானையில் சமைத்து காட்டுவார்கள். மண் பானை சமையல் என்று சொல்லாமல் ஏன் கிராமத்து சமையல் என்று சொல்கிறார்கள் என்று விளங்கவில்லை. நல்லது என்றுதானே சொல்கிறார்கள்.. இதில் கிராமம் மட்டும் ஏன்? நகரங்களில் சமைக்கக் கூடாதா?
மண் பானை சமையலில் அப்படி என்ன சுகம்? அதற்கு முன் ஒரு சில வரிகள். அந்தக் காலத்தில் கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் மிக சாதாரணமாக எங்கும் தெரிந்தவை. வீட்டிற்கு களிமண் கலந்து பூசப்பட்ட சுவர், களிமண் கலந்து செய்யப்பட்ட ஓடுகள், கட்டாந்தரை தூக்கம் ஆகியன இன்று அது மாதிரி வராது என்று பேசப்படும் விஷயங்கள். களிமண் அப்படி என்ன சுகம் அதில்? 1970ல் சீனாவில் ஒரு கிராமப் பகுதியில் 100 வருடமாக இயங்கிவரும் ஒரு பீங்கான் தொழிற்சாலையில் சேர்ந்த ஒரு உற்பத்தித்துறை மேலாளர் அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் கட்டாந்தரையில் வெகுநேரம் நின்றுகொண்டே வேலை செய்வதை பார்த்து குளிரிலும், வெயிலிலும் இவர் இப்படி நின்று கொண்டே வேலை செய்கிறார்களே இவர்களுக்கு மூட்டு வாத நோய் வந்துவிடுமே என வருத்தப்பட்டு, ஒரு மெடிக்கல் டெஸ்ட் செய்ய முனைந்தார். ஆச்சரியமாக ஒருவருக்கும் இந்த நோய் இல்லை எனத் தெரிந்தபோது பிறந்த ஆராய்ச்சியின் விளைவு களிமண்ணால் செய்யப்பட்ட உலை, தரை ஆகியன far infrared கதிர்களை வெளியிடுகின்றன. இதனால் மூட்டு வாத நோய், தசை சம்பந்தப்பட்ட வலிகள் ஆகிய நோய்களுக்கு ஒரு பலன் உள்ளது எனும் அறிவும் கிடைத்தது. இன்று மெடிக்கல் உலகில் களிமண்ணின் உபயோகங்கள் பல. இதனால் தான் அன்று நாம் களிமண்ணை எங்கும் உபயோகித்தோமா? தெரியவில்லை.
 
களிமண்ணால் செய்யப்பட்ட மண் பானைகளுக்கும் இந்த சக்தி உண்டுதானே. அறியாமலேயே ஒரு farinfrared therphy யை நம் முன்னோர்கள் தினம் தினம் செய்துகொண்டார்களோ? அதை விடுங்கள். மண் பானை சமையலுக்கு வருவோம். மண் பானையில் சமைக்க முக்கியமானது பாலிஷ் செய்யப்படாத பானை. இந்த பானையை குறைந்தது 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற விட வேண்டும். இதனால் பானையில் உள்ளசிறு துளைகள் தண்ணீரை இழுத்துக் கொள்கிறது. இந்த பானையில் மூடி வைத்து சமைக்கும்போது, அடுப்பின் சூடு, பானையில் உள்ள ஈரப்பதத்தை முதலில் குறைக்கும் இதனால் உள்ளே உள்ள உணவின் ஈரப்பதம் குறையாமல், உணவு அதன் சொந்த ஈரப்பதத்தில் வேகிறது. பாணியின் ஈரப்பதம் குறைவதற்கு முன் உணவு நன்றாக சமைக்கப்படுகிறது. மேலும் மண் பானை, far infrared கதிர்களை வெளியிடுவதால் இதன் வெப்பம் உணவுக்குள் நன்கு ஆழமாகப் புகுந்து உணவோடு நாம் சேர்த்த உப்பு மற்றும் உணவைப் பதப்படுத்தி சுவை தரும் பொருள்களை உள்ளுக்குள்ளும் நிறைக்கிறது. இதனால் உணவு உண்ணும்போது ஒரு தனிச் சவை இருப்பதாக அறிகிறோம். ஏன் மண்பானையில் செய்த மட்டன் பிரியாணி சுவை அதிகமாக தெரிகிறது என்பதை உணர்ந்தீர்களா? பானையை காற்று வெளிவராமல் அடைத்து, குறைந்த தீயில் சமைக்கும்போது, பானையின் ஈரப்பதம் மெதுவாக குறைய, உணவின் ஈரப்பதம் சற்றும் குறையாமலும், காற்று வெளிச் செல்ல முடியாததாலும் உணவு நமக்கு சமைக்கப் படுவதுடன், சத்துக்கள் உணவிலேயே தங்குகிறது. முக்கியமான ஒரு விஷயம் இது உணவுப் பொருள்களில் ஏற்கனவே உள்ள நீர், எண்ணெய் ஆகியவற்றையே திரும்ப உபயோகிப்பதால் அதிக எண்ணெய் விடத் தேவையில்லை. உங்கள் உணவில் தேவையில்லாத கொழுப்புச் சத்து குறைய வாய்ப்புண்டு இல்லையா?

மேலும் clay ஒரு alkaline ( கார குணம்) என்பதால் இது உணவில் உள்ள அமிலத்துடன் வினை செய்து அதன் அமிலத் தன்மையைக் (ph level) குறைக்கிறது. தக்காளி சாறு அதிகமுள்ள உணவை மண் பானையில் சமைத்து பாருங்கள் ஒரு சிறிய இனிப்பு கலந்த சுவையுடன் மிக நன்றாக இருக்கும். என்ன , சமைக்கும் நேரம் அதிகம் தேவை. மண் பானை உடையாமலிருக்க மேலும் பாதுகாப்பும் அதிகம் தேவை. எனவே மண்பானையில் சமைக்கும்போது கணவனை/மனைவியை (சமைப்பவர்களைப் பொறுத்து) நினைக்க வேண்டாம் ஏதாவது கோபத்தில் கரண்டியை வேகமாக சுழற்ற பானை உடையும் அபாயம் உண்டு. இன்றைய fast உலகத்தில் இதன் மதிப்பு அதனால்தான் குறைந்து வருகிறது. மற்ற பாத்திரங்கள் சூடு சீக்கிரம் ஆவதால் வேகமாக சமைக்க முடிகிறது. இந்த வசதிக்காக நாம் சத்துக்களை இழக்க உடன்பாடு செய்கிறோம். அடுத்த நல்ல பாத்திரம் கண்ணாடி. அதனால் தான் இன்று microwave cooking அதிக பிரபலமாகி வருகிறது.
மற்ற பத்திரங்களில் என்ன பிரச்சனை?

நான் ஸ்டிக்: இன்று மிக பிரபலமானது. அதிக கொழுப்பு இல்லாத உணவை தயாரிக்க உதவும். ஆனால் அதிக நேரம் வெரும் நான் ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைக்கும்போது அதிலுள்ள perfluorooctanic acid ( PFOA) நச்சுப் பொருள்களை வெளிவிட வாய்ப்புண்டு. கவனம் தேவை.
அலுமினியம்: இது ஆக்சிஜனுடன் சுலபமாக வினை செய்து அலுமினியம் ஆக்சைடு உருவாக்குகிறது. இது உணவுடன் உள்செல்வது நம் உடலுக்கு நல்லதல்ல. குறிப்பாக salt, tea, leafy vegetables, soda, lemon, tamarind and tomato போன்ற உணவுப் பொருள்களை அலுமினியப் பாத்திரத்தில் சமைப்பதோ, சமைத்த பின் வைத்திருப்பதோ நல்லதல்ல. anodized aluminum cookware அதிக கேடு விளைவிப்பதில்லை.
துரு ஏறா எஃகு(stainless steel): நல்லது என்று நாம் நம்புவது. இதிலுள்ள nickel, molybdenum, titanium, aluminum, and carbon steel ஆகியன உணவுடன் கலக்கிறது. ஆனால் மிகக்குறைவான அளவே எனவே சாதாரண மனிதனுக்கு கேடு இல்லை. இதிலுள்ள nickel சிலருக்கு கேடு விளைவிக்க வாய்ப்புண்டு. Stainless steelளுடன் உள்ளே porcelain coating கொடுக்கப்பட்ட பாத்திரங்கள் நல்லது. இப் பாத்திரங்களை தேய்க்கும் பொது அதிக கீறல் விழாமல் பார்த்துக்கொள்ளவும். கீறல்களில் நோய் கிருகிகள் தங்க வாய்ப்புண்டு, இவை கழுவதாலோ, துடைப்பதாலோ வெளிச் செல்வதில்லை.

காப்பர் மற்றும் பித்தளைப் பாத்திரங்கள் ஈயம் பூசப்பட்டு உபயோகிக்கப்படுகின்றன, ஈயச் சொம்பு ரசம் சூப்பர் டேஸ்ட் என சொல்பவர்கள் உண்டு. உண்மையில் அது ஈயம் அல்ல வெள்ளீயம் எனப்படும் tin metal ஆகும். இது காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் எளிதில் வினை புரிவதில்லை. ஈயம் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் அது நீங்கள் சிறு குழந்தைகளுக்கு வாங்கும் விளையாட்டு பொருள்களில் இருந்தாலும்.
எனவே மண்பானை சமையல் மிக நல்லது பொறுமை இருந்தால். அன்று என்ன தெரிந்தா செய்தார்கள்? அதுதான் கிடைத்தது. இயற்கை நல்லதையே நமக்குத் தருகிறது. இதை தவிர்த்து, நாம் தான் செயற்கை வாழ்க்கையில் நம்மை சந்தோசப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம்.
"unquote

நம் உடலுக்கு  நல்லவை என்று எது இருந்தாலும் அதை நாம் நடைமுறை படுத்துவது தானே புத்திசாலித் தனம். உடல் ஆரோக்கியமாய் இருந்தால்தானே நாம் நம் வாழ்வை நிம்மதியாகவும் மகிழ்ச்சியுடனும் கழிக்க முடியும்?

நானும் என் மனைவியும் உடனே எங்கள் வீட்டிற்கு 3 மண் பானைகள் வாங்கி வந்தோம். ஒன்று தண்ணீர் அருந்த, மற்றொண்டு குழம்பு மற்றும் ரசம் வைக்க, மூன்றாவது தயிர் தோய்ப்பதற்கு. மண் பானையில் தோய்க்கப்பட்ட தயிர் நீண்ட நாள் புளிப்பதில்லை. மேலும் அதில் ஒரு கூடுதல் சுவை உள்ளது. இந்த  மூன்று மண் பாண்டங்களும் எங்களுக்கு திருப்தி அளிக்க  மேலும் மூன்று வாங்கி வந்தோம், as fall back arrangement.

என் மனைவி தற்போது மண் பானையில் என்னென்ன செய்யலாம் என்பது குறித்து நிறைய யோசித்துக் கொண்டிருக்கிறார். மண் பானையில் வைக்கப்பட்ட  சின்ன வெங்காயம் போட்ட புளிக் குழம்பு மறு நாள் காலை பழைய சாதத்துடன் வெகு ருசியாக இருக்கிறது. மண்  பானையில் தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்ட பழைய சாதம் ருசியுடன் இருப்பது மட்டும் அன்றி உடலுக்கு குளிர்ச்சியையும் தருகிறது.

மேலும் ஒரு ருசிகர தகவல், மண்பானையில் வைக்கப்பட்ட பழைய சாதத்தை பெண்கள் தினசரி உண்டு வந்தால் அவர்களுக்கு மாதவிலக்கு காலங்களில் வரும் வயிற்று வலி மற்றும்  வெள்ளை படுத்தல் மட்டுப்படுகிறதாம்.

நீங்கள் உங்கள் மனைவி மற்றும் மகளின் ஆரோக்யத்தை விரும்புகிறவரா? உடனே மண் பானை வாங்கி உபயோகித்து பயன் அடைவீர்.

மீண்டும் பேசுவோம் 
 

Tuesday 21 January 2014

நா.ச.சு.ம (3) - (டைகர்) கோவிந்தராஜன் (3)

 (டைகர்) கோவிந்தராஜன் (3)

 
பறக்கும் படை அதிகாரி என்னை எழுப்பி பையன்களின் விவரம் சொல்லச் சொன்னதும், என் கையில் இருந்த லிஸ்ட் கொண்டு அவர்கள் பெயரை வாசிக்க ஆரம்பித்தேன். கடைசியில் நீங்கள் தான் சம்பத்தா? என்றார். ஆம் நான்தான் சம்பத். பார்த்தல் 43 வயசு போல இல்லை என்று நினைத்தார் போலும். எந்த காலேஜ் படித்தீர்கள், எந்த ஆண்டு என்று கேட்டார். AM Jain, 1975 என்றேன்.  எனக்கும் சம்பத் அவர்களுக்கும் 10வயசு  வித்யாசத்தை மனதில் கொண்டு நான் ஜெயின்-இல் படித்தது 1985  என்றாலும் 1975 என்றேன். ஆனாலும் அவர் விடவில்லை. நீங்கள் ஸ்டேட் டீம் / ரஞ்சி ரெப்ரெசெண்ட் பண்ணி இருகிறீர்களா என்றார். இல்லை எனக்கு அந்த சான்ஸ் கிடைக்கவில்லை  அதனால் தான் டீம் மேனேஜர் ஆக செல்கிறேன் என்றேன். எனது பதில் அவருக்கு திருப்தி தந்ததோ இல்லையோ தெரியவில்லை அதோடு அவர் என்னை விட்டு விட்டார், நானும் நிம்மதி பெரு மூச்சு விட்டேன்.
 
 தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் டெல்லி சென்று அடைந்ததும், நான் முன்பே கேட்டுக்கொண்ட படி எனது நண்பன் டபரா முரளி எங்களுக்கு ரோடக் செல்ல ஒரு வேன் ஏற்பாடு செய்து இருந்தான். வேனில் நாங்கள் ரோடக் சென்று அடைந்தோம். ரோடக் சென்ற பொழுது மணி 4:30 5:00 இருக்கும். பகலிலேயே நல்ல குளிர். எனக்கு வட இந்திய தட்பவெப்பம்  முன்பே பரிச்சயம் என்பதால் வியப்பாக இல்லை. ஆனாலும் உடன் வந்த வீரர்களில் சிலர் பயந்து விட்டனர்.
 
எங்களை அங்கு வரவேற்றது ஒரு சர்தார்ஜி. என்னை நான் அறிமுக படுத்தி கொண்டபின், சர்தார் நாங்கள் தங்கப்போகும் இடத்திற்கு எங்களை அழைத்துச்  சென்றார். நாங்கள் அனைவரும் சென்று சிறிது ஒய்வு எடுத்த பின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அவர்களை சந்திக்கச் சென்றேன். அவரிடம் இந்த போட்டிக்கு நாங்கள் பங்கேற்க வந்த செலவு கணக்கு ஒரு தோராயமான மதிப்பீடு செய்து ரூபாய் 85,000/- என்று கொடுத்தேன். எனது தோராயமான மதிபீட்டைப் பார்த்து அவர் புருவம் சுருக்கினார் . எனக்கோ கொஞ்சம் தர்ம சங்கடம் ஆகி விட்டது.  இதுதான் முதல் முறை என்பதால், ஒருவேளை நாம் அதிகமாக சொல்லி விட்டோமோ என்ற எண்ணம் எனக்கு தோன்ற ஆரம்பித்தது. அவர்  என்னை இன்னும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. முஜே மர்வாயகா க்யா ? (என்னை தீர்த்துவிடும் எண்ணமா ?) என் கேட்க எனக்கோ ஒன்றும் புரியவில்லை. நான் எனக்கு புரியவில்லை எனக் கூற, அவர் குறைந்த பட்சம் 1,00,000/- ரூபாய்க்கு மேல் போடவேண்டும் என்றார். நானோ மீண்டும் நல்ல பிள்ளையாய் எங்களுக்கு அவ்வளவு செலவு இல்லையே என்றேன். எனை பார்த்து சிரித்த அவர், அரே தும் பஹுத் சீதா சாதா ஆத்மி ஹோ! (நீ மிகவும் நேர்மையானவனாய் இருக்கிறாய்) உனது வரவு செலவு கணக்கை ஒரு லட்ச ரூபாய்க்கு எழுதி எடுத்து வா என்றார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நாம் மாற்றி எழுதாமல் அவர் நமக்கு பணம் தரப் போவதில்லை. வரும் கூடுதல் பணத்தில் வீரர்களுக்கு ஏதாவது செய்யலாம் என முடிவெடுத்து கணக்கை மாற்றி எழுது சமர்ப்பித்தேன். மேற்கொண்டு வந்த பணத்தில் வீரர்கள்  அனைவருக்கு 1000 ரூபாய் சேர்த்துக் கொடுத்தேன். மீதம் இருந்த பணத்தில் பிப் 1, 2013 அன்று அவர்களை டெல்லி-இல் உள்ள ஓர் கேளிக்கை பூங்கா (amusement park) ஒன்றிற்கு அழைத்து சென்று விட்டேன். 4 மணி நேரம் நீங்கள் விளையாடலாம். மாலை 6 மணிக்கு எல்லாரும் இந்த இடத்தில் வந்து சேர வேண்டும் என கூறி அவர்களுக்கு டிக்கெட்-ம் செலவுக்கு தலைக்கு ரூ 200ம் கொடுத்து அனுப்பினேன். பசங்களும் குதூகலமாக ஓ என்று கத்திக் கொண்டு ஓடினர். இரவு ஆறு மணிக்கு அங்கிருந்து கிளம்பி நேரே நியூ தில்லி ரயில்வே நிலையம் வந்தோம். எல்லாரையும் வைத்துக்கொண்டு பசங்களா ஒரு குட் நியூஸ், உங்களுக்கு இன்றைய இரவு சாப்பாடு செலவு என்னுடையது என்று கூறவும் அவர்களுக்கு இன்னும் குஷி ஆகிவிட்டது. பசங்களுக்கு இவ்வளவு செலவு செய்த பின்னும் கையில் ரூ 5000/- மிச்சம் இருந்தது என்றால் எனக்கு எவ்வளவு பணம் கொடுத்திருப்பார்கள் என்பதை உங்கள் யூகத்திற்கே விடுகிறேன். அவர்கள் கொடுத்த பணத்தையும் வரவு செலவு கணக்கையும் எடுத்துக்கொண்டு மறுநாள் TNCA சென்று திரு கும்பட் அவர்களிடம் சமர்பித்தேன். நான் பணம் திருப்பி கொடுத்ததும் திரு கும்பட் திரு விபிஜி-ஐ நோக்கி ஒரு அர்த்தமுள்ள பார்வையை வீசினார். பிறகு என்னை நோக்கி பணத்தை நீ வச்சுக்கோ கணக்கை அலுவலகத்தில் கொடுத்து விட்டு போ என்றார். நான் விபிஜி அவர்களை பார்த்தேன். அவர் கண்ணால் ஜாடை காட்டி எடுத்துக்கோ என்றார். எனக்கு ஆச்சர்யமாக போனது.

இதெல்லாம் சரி,  நீங்கள் சென்ற மேட்ச் என்ன ஆனது என்று தானே கேட்கிறீர்கள், Points table இதோ.

Vijay Hazare Trophy 1998/99 Table

PWTLNRAPtsNetRR
1Central Zone Under-16s43000171.799
2North Zone Under-16s42010150.303
3East Zone Under-16s4202004-0.204
4West Zone Under-16s4102013-0.659
5
South Zone Under-16s4003011-1.262

நாங்கள் தோற்றதற்கான காரணங்கள் 

1. தட்ப வெப்ப நிலை எங்களுக்கு சாதகமாக இல்லை - நல்ல குளிர் காலம். பகலில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி இரவு நேரத்தில் -1, -2 வரை சென்றது. தென் மண்டல வீரர்களால் இதை தாக்குப்  பிடிக்க முடியவில்லை. கை கால்கள் விறைத்து சிறப்பான முறையில் பவுலிங் மற்றும் பேட்டிங் செய்ய இயலவில்லை.

2. மற்ற அணி வீரர்கள் வாட்டசாட்டமாக இருந்தனர். பார்ப்பதற்கு 18-19 வயது போல் இருந்தது. நம் அணி வீரர்கள் எல்லாம் நண்டும் சிண்டும் ஆக  இருந்தனர். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை அளித்த திரு விபிஜி அவர்களுக்கு எனது நன்றிகள்.

இதுமட்டும் அல்லாமல்  திரு விபிஜி எனக்கு  2 ஆண்டுகளுக்கு 1997-98, 1998-1999 Kumbat Trophy நிர்வாக குழுவில் இடமளித்தார். மேலும் 1999இல் எனக்கு  Buchi Baabu tournamentஇல் ஆந்திரா டீமின்  local manager ஆக பொறுப்பினை அளித்தார். அங்கு தான் எனக்கு ஜவகல் ஸ்ரீநாத், அணில்  கும்ப்ளே, ராகுல் திராவிட், வேங்கடபதி ராஜு  மற்றும் டாக்டர் ஸ்ரீதர் ஆகியோருடைய அறிமுகம் கிடைத்தது.

இத்துடன் மட்டும் அல்லாமல் வேறோர் சந்தர்பத்தில் சச்சின், ஷேவாக், ஷேன் வான் (ஷேன் வானின் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த ப்ரிஜ் இல் இருந்து பாஸ்டர் டின் பீர் குடித்ததும் ஷேன் எங்களை துரத்தியதும் வேறு கதை). இதை விட முக்கியமாக ஒருமுறை ஜோயல் கார்னெர் (மேற்கு இந்திய கிரிகெட் வீர்ர்) ஐ எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதெல்லாம் எனக்கு மறக்க முடியாத மற்றும் கிடைத்தற்கரிய வாய்ப்புகள்.

விபிஜி  ஜெய ஹோ!

 


Monday 20 January 2014

நா.ச.சு.ம (3) - (டைகர்) கோவிந்தராஜன் (2)

(டைகர்) கோவிந்தராஜன்  - (2)

 
டைகர் அவர்கள் எனக்கு நல்ல நண்பர், ஆசான், வழிகாட்டி இன்னும் என்னவெல்லாம் உண்டோ எல்லாம் சொல்லலாம். எங்களுக்குள் அப்படி ஒரு புரிதல் (Chemistry) அமைந்தது.
 
ஜனவரி 23, 1999இல் நான் த.நா.கி.ச. விற்கு டைகர் அவர்களால் அழைக்கப்பட்டேன்.
 
விஷயம் இதுதான். ரோடக், ஹரியானாவில் நடைபெறும் விஜய் ஹஜாரே கோப்பைக்கான 16 வயதிற்கு உட்பட்ட தென் மண்டல அணியின் பொறுப்பாளராக என்னை நியமித்து, ஜனவரி  23, 1999 அன்று இரவு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வண்டியில் தில்லி சென்று அங்கிருந்து ரோடக் செல்ல வேண்டும். அங்கு நடக்கும் பந்தயங்களில் கலந்து கொண்டு விட்டு பிறகு தென் மண்டல அணியை பத்திரமாக சென்னை அழைத்து வர வேண்டும். இததான் எனக்கு இடப்பட்ட கட்டளை.
 
நான் கொஞ்சம் மலைத்துப்  போனேன். முதல் முறையாக எனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு, டைகர் அவர்கள் என்னை  நம்பி  ஒரு பெரிய பொறுப்பை கொடுத்துள்ளார். நன்றாக செய்ய வேண்டுமே என்ற படபடப்பு ஒருபுறம். மற்றொரு புறம் வீட்டில் என் மனைவிக்கு தகவல் சொல்ல வேண்டும். இரண்டு கைக் குழந்தைகளை வைத்துக் கொண்டு அவள் எப்படி சமாளிப்பாள் , ஒருவேளை நான் போகக் கூடாது என்று மறுத்து விடுவாளோ? அப்படி செய்தால் எப்படி சமாளிப்பது? டைகர் இடம் எனது சங்கடத்தை சொன்னேன். திரு கும்பட் அவர்களின் அறையில் இருந்தே எனது வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். சுருக்கமாக விஷயம் சொல்லி விட்டு, இரவு நான் தில்லிக்கு கிளம்ப வேண்டும் என்று சொன்னேன். மேலும் இது டைகர் அவர்களின் விருப்பம் என்பதையும் சொன்னேன்.
 
சேப்பாக்கத்தில் இருந்து உடனடியாக எனது வீடு திரும்பினேன். வீடு சென்று சேரும் பொழுது மணி இரவு 7.30. 10.30க்கு எனக்கு ரயில். அதற்கு முன் நான் செய்ய வேண்டிய விவரங்களை வரும் நபரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சம் படபப்ப்பு தான். ஆனாலும் எனக்குள் நம்மால் முடியும் என்ற ஒரு நம்பிக்கை  ஒரு பிரயாண  பையில்  கையில் கிடைத்த துணிகளை எடுத்து வைத்துக்கொண்டு , அவசரமாக உணவு உண்டு 8.30 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டேன்.  
 
அப்போது கைபேசி வசதி எல்லாம் இல்லை. இரண்டு நாள் கழித்து ரோடக் சென்ற பிறகுதான் என் மனைவியோடு பேச முடியும் என்ற நிலைமை. 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று சேர்ந்தால் அங்கு தா.நா.கி.ச.வைச் சேர்ந்த நபர் மற்றும் என்னுடன் பயணம் செய்யகூடிய விளையாட்டு வீரர்கள் நின்று கொண்டு இருந்தனர்.
 
வந்தவர் என் வசம் பயண சீட்டு மற்றும் நான் செய்ய வேண்டிய விவரங்கள் அடங்கிய பைல்  ஒன்றையும் கொடுத்தார். பயண சீட்டில் என் பெயர் சம்பத், வயது 43 என எழுதப்பட்டிருந்தது. எனக்கோ அப்போது வயது 33 தான். மேலும் 33 வயதிலும் நான் 25 வயது போலத்தான் காட்சி அளித்தேன். என்ன செய்வது, அமைதியாக பயணச் சீட்டு மற்றும் பைல் -ஐ பெற்றுக் கொண்டு, விளையாட்டு வீரர்கள் யார் யார் என அறிய முயன்றேன். ஒவ்வொருவரையும் தங்களை அறிமுகப்  படுத்திக் கொள்ள சொன்னேன். அவர்களின் விவரங்கள்  இதோ :
 
  1. கலீல்
  2. விக்ரம் குமார் 
  3. சௌகலே 
  4. ஆதித்யா ஸ்ரீகாந்த்  (கிருஷ்  ஸ்ரீகாந்தின் மகன்)
  5. ஜெய ஷங்கர் 
  6. அம்பட்டி ராயுடு (IPL ராயுடுதான்)
  7. ஞானேஸ்வர ராவ்  
  8. அப்பா ராவ் 
  9. லஜாராஸ் 
  10. டி-சோசா 
  11. தர்மி சந் 
  12. மல்லிக் 
  13. ஸ்ரீனிவாச ராவ் மற்றும் இருவர் பெயர் மறந்து விட்டது.
எல்லாம் விடலை பையன்கள். ஒரே கூச்சல் கும்மாளமாய் இருந்தனர். மனசுக்குள் மெல்லிய பயம் ஒன்று உண்டானது. எப்படி இவர்களை சமாளிக்கப் போகிறோம் என்று. மொத்தம் 16 டிக்கெட். பயணச் சீட்டு மற்றும் பையன்களை என்னிடம் ஒப்படைத்து விட்டு வந்த நபர் கிளம்பிச் சென்றார். அவர் சொன்ன விவரம் என்ன வென்றால் அந்த வருடம் ஜனவரி  26-30 நாட்களில் இந்திய பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி சென்னையில் நடப்பதால் திரு சம்பத் அவர்கள் வர இயலாமல் போனது என்பதாகும்.
 
ரயிலில் 3AC பெட்டியில் எங்களுக்கு முன்பதிவு செய்யப் பட்டிருந்தது. பயணிகள் பட்டியல் ஓட்டப்பட்டவுடன் எங்கள் பெயர் விவரங்கள் சீட்டு எண் சரியாக இருக்கிறதா என் சோதித்து விட்டு வண்டியில் ஏறினேன் (எப்போதிருந்து  எனக்கு இது ஒரு பழக்கம் வந்தது என்பதை வேறோர் முறை சொல்கிறேன்). பையன்கள் எல்லாம் ஒரே ரகளை செய்தனர். எல்லோரையும் அடக்கி, அவர் அவர் சீட்டில் அவர்களை இருக்க செய்து விட்டு, என் கையில் கொடுக்கப் பட்ட பைல் -ஐ படிக்க ஆரம்பித்தேன்.
 
Match Schedule-ஐ பார்த்தேன்.
 
26 Jan 1999 
East Zone Under-16s v South Zone Under-16sMaharaja Aggarsain Stadium, Rohtak
26 Jan 1999 
North Zone Under-16s v Central Zone Under-16sVishkarma High School Ground, Rohtak
27 Jan 1999 
Central Zone Under-16s v East Zone Under-16sMaharaja Aggarsain Stadium, Rohtak
27 Jan 1999 
North Zone Under-16s v West Zone Under-16sVishkarma High School Ground, Rohtak
28 Jan 1999 
Central Zone Under-16s v West Zone Under-16sMaharaja Aggarsain Stadium, Rohtak
28 Jan 1999 
North Zone Under-16s v South Zone Under-16sVishkarma High School Ground, Rohtak
30 Jan 1999 
Central Zone Under-16s v South Zone Under-16sMaharaja Aggarsain Stadium, Rohtak
30 Jan 1999 
East Zone Under-16s v West Zone Under-16sVishkarma High School Ground, Rohtak
31 Jan 1999 
North Zone Under-16s v East Zone Under-16sMaharaja Aggarsain Stadium, Rohtak
31 Jan 1999 
South Zone Under-16s v West Zone Under-16sVishkarma High School Ground, Rohtak
 
எங்களுக்கு மொத்தம் 4 பந்தயங்கள். ஜனவரி 26, 28, 30 மற்றும் 31.
பிப்ரவரி 1, 1999 எங்களுக்கு இதே தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை திரும்ப 3AC ரயில் டிக்கெட் எடுக்கப்பட்டு அதுவும் அந்த பைல்-இல் வைக்கப் பட்டிருந்தது. இத்துடன் வழி செலவுக்காக ரூபாய் 5000 எனக்கு அளிக்கப் பட்டிருந்தது மேற்கொண்டு செலவுக்கு அங்கு சென்று பெற்றுக்கொள்ளச் சொல்லி எனக்கு அறிவுத்தப் பட்டிருந்தது. பையன்கள் அனைவரையும் அவர் அவர் படுக்கையில் படுக்க சொல்லி விட்டு நான் டிக்கெட் பரிசோதகர் வரும் வரை அந்த பைல்-இல் கொடுக்கப்பட்ட விவரங்கள் அனைத்தையும் மீண்டும் ஒரு முறை வாசித்து மனதில் ஏற்றிக் கொண்டேன். பரிசோதகர் வந்து டிக்கெட் பரிசோதித்த உடன் நான் உறங்கச் சென்றேன்.
 
இரவு 1:30 - 2.00 மணி அளவில் ரயில்வே பறக்கும் படை (flying squad) அதிகாரி ஒருவரால் எழுப்பப் பட்டேன். விளையாட்டு வீரர்களுக்கு உண்டான சலுகை விலையில் பயணச்  சீட்டு வாங்கப் பட்டிருந்தது.  வந்தவர்கள் அனைவரும் விளையாட்டு வீரர்கள் தானா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும். ஒவ்வொருவராக எழுப்புங்கள் என்றார். எனக்கோ இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
 
மீண்டும் பேசுவோம் 
 
 
 
 

Sunday 19 January 2014

நா.ச.சு.ம (3) - டைகர் கோவிந்தராஜன்

(டைகர்) கோவிந்தராஜன் 

 
எனக்கு கிரிக்கெட் ரொம்ப தெரியாது. ஆனால் கிரிக்கெட் சம்பந்த பட்டவர்களுடன் எனக்கு நட்பு கிடைத்தது நான் செய்த பாக்கியம் என நினைக்கிறேன். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க (த.நா.கி.ச) சில நிர்வாகிகளுடன் எனக்கு தொடர்பு 1997-98இல் ஏற்பட்டது. அதற்கு காரணம் எனது குரு, நண்பர், என்னுடன் வங்கியில் பணிபுரிந்த திரு வி.பி.கோவிந்தராஜன் அவர்கள். செல்லமாக விபிஜி என்றும்  ஹெட் என்றும்  எங்களாலும், த.நா.கி.ச. வட்டாரத்தில் டைகர் என்றும் அன்பாக  அழைக்கப் படுபவர்.

அவருக்கு டைகர் என பெயர் வரக்  காரணம் அவர் நடத்திய டைகர் கிரிக்கெட் கிளப். என்னிடம் அவருக்கு என்ன ஈர்ப்பு வந்தது என்று எனக்கு தெரியவில்லை. என் மீது அதீத வாஞ்சையும் நட்பும் கொண்டவர். உரிமையுடன் என்னை அவர் திட்டுவார். எனக்கு தெரியும் அதெல்லாம் எனது நன்மைக்காகதான் என்று. ஒரு கட்டத்தில் அவர் என்னை மரியாதையாக பேசினால் அன்று எனக்கு எதாவது அடி படும் அல்லது காயம் உண்டாகும்.

ஒருமுறை காலை அலுவலகம் சென்ற உடன் என்னை அவர் அழைத்திருக்கிறார். நான் கவனிக்காமல் இருந்திருக்கிறேன். சார்.. என்ன உங்களை கூப்பிட்டால் காதிலே விழாதா? என்று கூறவும் நான் என் சீட்டில் இருந்து எழுந்து அவரை நோக்கி சென்றேன். நான் எழுந்த அவசரத்தில் நான் அமர்திருந்த நாற்காலி அருகில் இருந்த ஸ்டீல் அலமாரி மேல் இடிக்க, அலமாரி மேல் இருந்த பழைய பாக்ஸ் பைல் தலையில் விழுந்து தலை புடைத்து விட்டது.

1999ல் எனக்கு அதிகாரியாக பதவி உயர்வு கிடைத்தபோது எனது பதவி உயர்வு கடிதத்தை எனக்கு கொடுக்க என்னை சார் என்று அழைத்தார். அவரை நோக்கி செல்லும் பொழுது அருகில் இருந்த ஸ்டூலில் கால் இடறி கட்டைவிரலில் ரத்தம் வந்து விட்டது. அதன் பிறகு அவர் என்னை சார் என கூப்பிடுவதையே விட்டு விட்டார். திரு வி.பி.ஜி. அவர்கள் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர். அதேபோல் சம்ஸ்க்ருதத்திலும் தேர்ச்சி பெற்றவர். நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர். நல்ல நண்பர். நல்ல மனிதர். முகத்துக்கு நேரே பேசும் சுபாவம் உள்ளவர். ஆரம்ப காலத்தில் அவரது இந்த வெளிப்படை தன்மை எனக்கு எரிச்சல் ஊட்டினாலும் அவரையும் அவரது சுபாவமும் புரிந்த பிறகு எனக்கு அது பழகி விட்டது.

1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் என்று நினைக்கிறேன். அலுவலகத்தில் மாலை 5.00 மணிக்கு வீட்டுக்கு செல்ல தயாராகி கொண்டிருக்கும் பொழுது விபிஜி அவர்களிடம்  இருந்து ஒரு போன். டேய் உடனே கிரிக்கெட் சங்கத்திற்கு வா. அவசரம். வேறு எதுவும் சொல்ல வில்லை. அப்போது தான் புதிதாக பறக்கும் ரயில் சென்னைக்கு வந்திருந்தது. சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகில் தான் நான் வேலை செய்த எங்களது வட்டார தலைமை அலுவலகம் இருந்தது. உடனே பறக்கும் ரயில் பிடித்து சேப்பாக்கம் இறங்கி கிரிக்கெட் சங்கத்திற்கு சென்றேன்.

அப்போது சங்கத்தின் செயலாளராக மறைந்த திரு அசோக் கும்பட் அவர்கள் இருந்தார். விபிஜி கும்பட் அவர்களின் அறைக்கு என்னை அழைத்துச் சென்று என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். யாரு இந்த பையனா? இந்த வேலைக்கு இவன் சரி படுவானா ? என கும்பட் அவர்கள் கேட்க இவரோ கரெக்டாக இருப்பான் சார் என் கூறினார். வடிவேலு காமெடியில் வருவது போல என்ன வேலை என்று அப்போது எனக்கு புரிய வில்லை. பிறகு விபிஜி அவர்கள் விளக்கிய பிறகு தான் எனக்கு தெளிவாக புரிந்தது.

அவர் சொன்ன வேலை என்னால் செய்ய முடியுமா? எனக்குள் ஒரு சின்ன சந்தேகம்... ஆனால் அவர் தந்த ஊக்கம் என்னை ஒத்துக்கொள்ள  செய்தது.

என்ன வேலை? மீண்டும் சந்திக்கும் பொழுது சொல்கிறேன்.....

தாயெனும் கோவில் - பகுதி 7

என் அம்மா (7)- நிறைவுப்  பகுதி 


அம்மாவின் மறைவு குறித்து எனக்கு போன் வந்த பிறகு கூட என்னால் நம்ப முடியவில்லை. ஆனாலும் போன் செய்தது என் சகோதரியின் கணவர். நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை. ஒரு வாரம் முன்பு அலுவலக வேலையாக கொழும்பு செல்லும் வழியில் சென்னையில் நான் அம்மாவை சந்தித்தது, பேசியது, அம்மாவின் கையால் காபி குடித்தது என மீண்டும் மீண்டும் அந்த நிகழ்வே என் மனத் திரையில் வந்து என் கண்ணை கண்ணீர் மறைத்தது. ஏற்கனவே அதிர்ச்சியில் இருக்கும் என் மனைவி குழந்தைகள் முன்னே தைரியமாக காட்டிக் கொண்டாலும் என்னால் என்னை கட்டுப் படுத்த முடியவில்லை. குளியல் அறையில் சென்று குழாயை திறந்து விட்டு விட்டு நான் அழுவது வெளியே கேட்கா வண்ணம் மனது விட்டு கதறி அழுதேன். மனசு கொஞ்சம் லேசானது.

வெளியில் வந்த உடன் அடுத்து என் அண்ணாவிடம் இருந்து போன். தம்பி அம்மா போய்ட்டாடா இவ்வளவுதான் அண்ணாவால் பேச முடிந்தது. நான் என்னை தேற்றிக்கொண்டு விஷயம் கேள்வி பட்டேன் அண்ணா. மாலை 5.00 மணி விமானத்தில் சென்னை வருகிறேன் என்று கூறினேன்.

அம்மா தனது பிறந்த ஊர் கிள்ளியூர் சென்று இருக்கிறாள். அம்மாவின் பிரிய தோழி மாரியம்மன் கோவிலுக்கு போயிருக்கிறார் அங்கு மயங்கி விழுந்து இருக்கிறார். டாக்டரிடம் கொண்டு போயிருக்கிறார்கள். எப்போதும் போல டாக்டர் டூ லேட் என்று சொல்லி விட்டராம்.

அடுத்து என்ன செய்வது... ஒன்றும் புரியவில்லை. சென்னைக்கு அடுத்த விமானம் எத்தனை மணிக்கு? எப்படிப் போவது? கேள்வி மேல் கேள்வி மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

மாலை 5:30 மணிக்கு விமானம். 2.00 மணிக்கே நாங்கள் தங்கி இருந்த நவிமும்பையில் (nerul) இருந்து கிளம்பினோம். சாதரணமாக நவி மும்பையில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி ஏர்போர்ட் அதிக பட்சமாக 1 மணி நேர பயணம் தான். ஆனாலும் நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இங்க உட்கார்ந்து இருப்பதற்கு நாம ஏர்போர்ட் போய்க் காத்திருப்போம் என என் மனைவியும் குழந்தைகளும் ஆமோதிக்க எனக்கு ரெகுலராக வரும் மேரு டாக்ஸி டிரைவர் பிஷுவுக்கு போன் செய்து வரச் சொன்னேன். பிஷு எப்போதும் போல காலம் தாழ்த்தாமல் வந்து சேர்ந்தான். எனது சோர்வான முகத்தைப் பார்த்து அவன் விசாரிக்க என்னால் பேச முடியவில்லை. என் மகள்தான் அவனுக்கு பதில் அளித்தாள்.

 3.00 மணிக்கே ஏர்போர்ட் உள்ளே நுழைந்தோம். ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாக கழிந்தது. எப்போது போர்டிங் கால் வரும் எப்போது விமானம் ஏறுவோம் என ஒரே தவிப்பு.

எங்களை நேரே என் பெரிய சகோதரியின் வீட்டுக்கு வரச்சொன்னதால் நாங்கள் அங்கு சென்றோம்.அதற்குள் என் உடன் பிறந்தவர்கள் அனைவரும் அங்கு திரண்டு இருந்தனர். ஒரே அழுகுரல். யாருக்கு யார் ஆறுதல் கூறுவது? ஒன்றும் புரியவில்லை.

அம்மாவுக்கு என்ன நடந்தது ...

திருநள்ளாரில் நடைபெற்ற எனது பெரியப்பாவின் (அம்மாவின் பெரிய சகோதரியின் கணவர்) 90 வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள என் தாயின் உடன்பிறந்தவர்களுடன் எனது பெற்றோர் சென்றுள்ளனர். விழா முடிந்த மறுநாள் எல்லோரும் கிள்ளியூர் சென்று அங்கு கோவில்களில் சிறப்பு பூஜை செய்ய ஏற்பாடு நடந்துள்ளது. எல்லோரோடும் என் பெற்றோரும் கிள்ளியூர் மாரியம்மன் கோவில் சென்றுள்ளனர்.

நான் முன்பே கூறியது போல அம்மாவிற்கு மாரியம்மன் என்றால் மிகுந்த இஷ்டம். மாரியம்மன் அம்மாவிற்கு கடவுள் என்ற நிலையை விட ஒரு உற்ற தோழி போல. ஒவ்வொரு முறையும் எங்கள் வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் அதோடு கூட மாரியம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் பூஜை முதலியன நடைபெறும். அம்மா எனது பெற்றோரின் சதாபிஷேகத்தின் பொழுது அம்மனுக்கு தங்கத்தில் தாலி சார்த்தி இருந்தார். அந்த அளவுக்கு மாரியம்மன் மீது அம்மாவுக்கு அப்படி ஒரு பிரியம்.  

சதா சர்வகாலமும் அம்மாவிற்கு தெய்வ சிந்தனை தான். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அம்மாவிற்கு தெய்வத்திடம் ஒரே பிரார்த்தனை தான். "நான் பூவோடும் பொட்டோடும் தீர்க்க சுமங்கலியாய் உன் சரண் அடையவேண்டும். நோய் நொடியில் கிடக்காமல் என்னை கொண்டு போ தாயே" என்பது தான்.

அம்மா வாழ்வின் உண்மையை நன்கு உணர்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அம்மா மனிதர்களை விட மகமாயியை நம்பினார். கடவுளை நம்பினோர் கை விடப் படார் என்பதற்கு அம்மாதான் ஒரு பெரிய சான்று. வாழ்வின் அனைத்து சுக துக்கங்களும் அம்மா கடந்து வந்தார். அம்மா கடந்து வந்த பாதை கடினமானது என்றாலும் அவரது சாதனை அவருக்கு வாழ்வில் ஒரு உன்னத ஸ்தானத்தை கொடுத்தது. எங்கள் குடும்பத்தில் அதாவது அம்மா வழியில் எந்த ஒரு விசேஷம் என்றாலும் அதில் முதல் ஆளாக அம்மாதான் இருப்பார். எங்கள் குடும்பத்தில் அனைத்து சம்பந்திகளுக்கும் அம்மா பிரியமானவர். இப்படிப் பட்ட ஓர் குணவதியை யாருக்கு தான் பிடிக்காது. அம்மா எந்த பல்கலைக் கழகத்தில் இந்த நற்பண்புகளை பயின்றார்?

ஒருநாள் தேவி பராசக்தி பிரும்மாவிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். எனக்கு பிரிமான ஒரு உயிர், பல காலம் என்னை மட்டுமே எண்ணி தவம் செய்து வருகிறது. அந்த உயிருக்கு நான் அடைக்கலம் வழங்கி என் சரண் சேர்த்துக்கொள்ள ஆசைப் படுகிறேன். இந்த ஜனனம் தான் அந்த உயிர்க்கு கடைசி ஜென்மமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் எனக்கு உதவி செய்ய வேண்டும் என வேண்டி நின்றாள். 

தேவி ராஜராஜேஸ்வரியின் வேண்டுகோள் கேட்ட பிரம்மா தேவி தயை கூர்ந்து அந்த உயிரின் விவரங்கள் எனக்கு எடுத்து உரைக்க வேண்டும் என்றார். தேவி விவரிக்க, அப்போது பிரம்மா தாயே உமது வேண்டுகோளுக்கு நான் செவி சாய்க்கிறேன், ஆனால்  நீங்கள் சொல்லும் அந்த உயிருக்கு இன்னமும்  11 ஜென்மாக்கள் மீதம் இருக்கின்றன. அவற்றை கடந்த பின்பே அவ்வுயிர் உந்தன் சரணடைய இயலும் என்றார்.
 
பிரம்மாவின் இந்த பேச்சு தேவிக்கு திருப்தியாக இல்லை. 11 ஜென்மம் என்பது காலம் கடந்த ஒன்றாக எனக்கு தோன்றுகிறது. வேறு ஒரு உபாயம் சொல்லுங்கள் என்றாள் .
 
தேவியின் கூற்றை கேட்ட பிரம்மா  தேவி ஒரு உபாயம் உள்ளது. நீங்கள் சிபாரிசு செய்யும் உயிரானது பூமியில் ஒரு மானிட ஜென்மமாக பிறக்க வேண்டி இருக்கும். அதிலும் ஒரு பெண்ணாக ஜனிக்க வேண்டும். நான் சொல்ல வேண்டியது இல்லை, பெண்ணாக பிறக்கும் அந்த உயிரானது பல்வேறு இன்னல்களையும் கஷ்டங்களையும் அனுபவிக்க நேரும். அத்தகைய நேரத்தில், அந்த உயிர் சோர்வுறும் சமயத்தில் தாங்கள் அதற்கு உற்ற துணையாய் இருந்து அருள வேண்டும், சம்சார சாகரம் கடந்து இந்த உயிர் கரையேற வேண்டும். வாழ்கை பயணத்தில் இந்த உயிர் பல சுக துக்கங்களுக்கு ஆளாக வேண்டும். இது சாத்தியமாகும் பட்சத்தில் என்னால் உங்கள் வேண்டுகோளை ஏற்க முடியும் என்றார்.
 
பிரம்மா மேலும் கூறுகையில், அந்த பெண்ணுக்கு பத்து சந்தான பாக்யங்களை அளிக்கிறேன். பெண்ணுக்கு ஒவ்வொரு பிரசவமும் ஒரு மறு ஜென்மம் தானே. என் கணக்குப் படி 11 ஜென்மம் எடுத்தது போலும் ஆகிவிடும் என்றார்.  அந்த உயிரின் அற்பணிப்பு திறன் மீது அசைக்க முடியா நம்பிக்கை கொண்ட தேவி, சிறிதும் தயக்கமின்றி அந்த உயிரை ஆட்கொண்டாள் . அந்த உயிர் கரை ஏறியதா? யார் அந்த உயிர்? 

தேவியால் சிபாரிசு செய்யப்பட அந்த உயிர் எனது தாய் தான்.  பிரம்மா மற்றும் தேவி ராஜ ராஜேஸ்வரியின் இந்த லீலையில் எங்களை போல வேறு பல உயிர்களும் துணைக்  கதாப்  பாத்திரம் ஏற்று நடித்தன. "பூவோடு சேர்ந்து நாறும் மணப்பது போல" நாங்களும் நற்பயன் அடைவோம் என்று நம்புகிறோம். 

 
2011, மே மாதம் 20ஆம் தேதி, பிரம்மாவிடம் இருந்து தேவிக்கு அழைப்பு வந்தது. தேவி நீவிர் கூறிய அந்த உயிர் உமது பாதார விந்தம் அடையும் நாள் நெருங்கி  விட்டது. இன்றிலிருந்து பூலோக கணக்குப்படி 10 ஆம் நாள் நீவிர் அந்த உயிரை ஆட்கொள்ளலாம் என்று கூறினார். தேவி யோசித்தாள். இந்த புண்ணிய ஆத்மாவை எனது புண்ணிய ஸ்தலத்திலேயே நான் ஆட்கொள்ள விரும்புகிறேன். ஆனாலும் இவளுக்கு இன்னமும் பந்த பாசம் தீர்ந்த பாடில்லை. இவள் கடமைகளை முடித்து விட்டாள் என்றாலும் பழுத்த பழம் கிளையை விட்டு விலக மறுப்பதை போல இவள் இன்னமும் பாசம் என்னும் கிளையை விட மறுக்கிறாள், இவளை தனியே பிரித்து அழைத்து வந்து ஆட்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தாள் .

 2011, மே மாதம் 30 ஆம் தேதி - . விடியற் காலையிலேயே எழுந்த அம்மா  தன்னுடைய நித்திய பூஜைகளை முடித்துக்கொண்டு, உடன் வருபவர்கள் சாப்பிட தேவையான சிற்றுண்டி வகைகளை செய்து எடுத்துக்கொண்டு அனைவருடனும் கிள்ளியூர் சென்று இருக்கிறார். காலை முதலே அம்மா யாரிடமும் அதிகம் பேசவில்லையாம்.

கோவில் பூசாரிக்கு தகவல் சொல்லி அனுப்பி விட்டு, அவர் வருவதற்குள் அம்மாவும் மற்றவரும் மாரியம்மன் கோவிலுக்கு வந்து கோவிலை சுத்தம் செய்து, அலம்பி விட்டு கோலம் போட்டு பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து உள்ளனர். பூசாரி வந்த உடன் அவரைக்  கூப்பிட்டு கருவறையை திறக்கச்  சொல்லி இருக்கிறார் அம்மா. நேரே கருவறைக்குள் சென்று தான் அம்மனுக்கு அணிவித்த தாலி இருக்கிறதா என்று பார்த்து இருக்கிறார்.  அம்மனுக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் அம்மா மாவிளக்கு ஏற்றும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். அம்மனுக்கு அபிஷேகம் முடிந்து தீபாராதனை காட்டும் பொழுது மாவிளக்கிற்கு தீபாராதனை காட்டிக்கொண்டிருந்த அம்மா, நிமிர்ந்து மாரியம்மனை நோக்கினார்.

 
கருவறையில் இருந்து தேவி ராஜ ராஜேஸ்வரி ப்ரத்யக்ஷமாகி அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய்  காட்சி தந்து தன்  இரு கரம் நீட்டி ருக்மணி, என் பிரியமான உயிரே, உன் ஜன்ம சாபல்யமடையும் கணம் நெருங்கி விட்டது. வா. என்னுடன் ஐக்கியமாகி விடு என்று அழைத்தாள்.அம்மாவின் முகத்தில் அப்பிடி ஒரு தேஜஸ். அந்த நேரத்திலும் கையில் ஏந்தி இருந்த தீபாரதனை தட்டை தூக்கியபடி, ஜகன் மாதா, என்னை ஆட்கொள்ள வந்தாயா என்ற அர்த்தத்தில் ஒரு புன்முறுவலுடன் அப்படியே நிலத்தில் சாய்ந்தார். அம்மாவின் இறுதி நிமிடங்களில் அவருடன் இருக்கும் பாக்கியம் அவர் பெற்ற பிள்ளைகள் யாருக்குமே கிட்டவில்லை. முன்பே கூறியதை போல இது தெய்வ சங்கல்ப்பம் என நினைக்கிறேன்.

ஆனாலும் இத்தகைய புண்ணியவதிக்கு, தேவியின் பிரிய ஆத்மாவுக்கு பிள்ளையாய் பிறந்த பாக்கியத்தை எண்ணி கர்வப் படுகிறோம். என் தாயின் குண நலன்களில் ஆயிரத்தில் ஒரு பங்கேனும் எங்களால் பின்பற்ற பட இயலுமாயின் நாங்களும் உய்வுண்டு  வாழ்வோம் என்பதில் ஐயம் இல்லை.
 
 
 

அன்னைக்கு ஓர் அஞ்சலி 

 
உருவம் கொடுத்தாய், வாழ்வில் உயர்வும் கொடுத்தாய்
இன்னல் கொடுத்தாலும் இன்முகம் காண்பித்தாய்
உன்னைப்போல் ஒருதாய் உலகார் கண்டதில்லை
ஊரார் மகவெனினும் ஊட்டியே நீ வளர்த்தாய்
தவமாய் இருந்து எனை பெற்றேன் என சொன்னாயே 
தவிக்கிறேன் உனை இழந்து  தாயே நீ வருவாயா 
 
உன் சொத்து என்று  உன் பாசம் ஒன்றுமட்டும் 
என்றென்றும் எனதென்று இறுமாந்து நின்றேனே 
உன் தாயை காணுகையில் என் தாயாய் நீ இருந்து 
எனை விட்டு போகாமல் இருந்திருக்க மாட்டாயா?
 
அதை செய்தாய் இதை செய்தாய் எனச்  சொல்லி 
எல்லோரும் அழுகையிலே  
எனக்கென்று சொல்லி அழ ஏதுமின்றி போனதம்மா 
 
என் அன்பு  என்னவென்று உன்மனம் அறிந்தாலும் 
எதிரி என எனைச் சாடி எல்லோரும் ஏசுகிறார் 
உன்பிள்ளை நான் இங்கு உறவின்றித் தவிக்கிறேன் 
உடன் இருந்து நீ என்னை உய்விக்க வருவாயா?
 
ஊட்டிய பாலும் சோறும் உதிரமாய் ஓடுதம்மா 
உனை இழந்த என் இதயம் உயிரின்றி வாடுதம்மா 
நிரபராதி நான் என்று நிச்சயம் நீ அறிவாய் 
ஆனாலும் எனக்கிந்த ஆயுள்  தண்டனை ஏன் ?
 
கடைசியாய் பிறந்ததால் கரையேறத் தெரியாமல் 
கட்டுமரமாய் உந்தன் கருணை தனை வேண்டுகிறேன் 
கண்டிப்பாய் நீ என்னை காத்திடுவாய் என்றெண்ணி 
கண்ணீர் மலரதனை உன் காணிக்கை ஆக்குகிறேன் 
 
சிறகு கொண்ட சிறு குஞ்சை தாய் பறவை  பிரிவதுபோல் 
சிறு பிள்ளை என்னை நீ பிரிந்து தான் போனாயே 
கண்கானா திருந்தாலும் கடுகத்தனை பிள்ளை நான் 
கண்கலங்க வைத்து நீ காணாமல் போனதும் ஏன் 
 
அன்னை நீ போன பின் அனாதையாய் போனேனே 
கடவுளாய் நீ இருந்து காப்பாற்ற வந்திடம்மா 
காமாக்ஷி விருத்தம் அதில் காண்கிறேன் உன் உருவை 
காத்து ரட்சித்து எனை கரை சேர்க்க வந்திடம்மா 
 
உன் உடல் இந்த உலகத்தை பிரிந்தாலும் 
உள்ளத்தில் கோவில் கட்டி உனை அதில் வைத்துள்ளேன் 
அன்னைக்கு நான் தந்த அஞ்சலி இதை ஏற்று 
அருவமாய் உடனிருந்து ஆட்கொண்டு பேணிடுவாய்!
 

எங்கள் தாய் என்றென்றும் எங்கள் உடன் இருந்து வழி நடத்துவாள் என்பதில் எள்ளளவும் எங்களுக்கு ஐயம் இல்லை.