Sunday 5 January 2014

எனக்கு தமிழூட்டிய ஆசான்கள் (2)




திரு தி. இராமலிங்கம்

திரு திஇரா அவர்கள் தமிழ் கற்பிக்கும் முறையே தனி. சிரிக்க சிரிக்க பாடம் நடத்துவார். அதே சமயம் மிகவும் கண்டிப்பானவர். தமிழ் இலக்கணம் அவரிடம் பயின்றால் பிறகு பரீட்சைக்கு படிக்க வேண்டிய அவசியமே இல்லை. கேள்வித்தாளை பார்த்தவுடன் தி-இரா அவர்களின் முகமும் அவர் பாடம் நடத்திய விதமும் அவர் மேற்கோள் காட்டிய உதாரணங்களும் நம் மனக்கண் முன்னே விரியும் .

முழுவதும் தமிழிலேயே பாடங்கள் நடத்துவார். எங்களுடன் உரையாடும் பொழுது கூட ஆங்கில வார்த்தை வராது.  அவரை அய்யா என்றே நாங்கள் அழைக்க வேண்டும். சில சமயங்களில் வாய் தவறி அவரை சார் என்று அழைத்து விட்டால் அவர் செய்யும் கிண்டலும் கேலியும் மறு முறை அவரை அவ்விதம் அழைக்க தோன்றாது . எனக்கு தமிழ்பால் ஊட்டி தமிழ்பால் எனக்கு பற்று வர தி-இரா அய்யாவும் ஒரு காரணம். அவரது தாக்கம் தான் என்னை இந்த வலைப் பதிவை முழுவதும் தமிழிலேயே தர தூண்டுகோலாய் அமைந்தது.

உவம உருபுகள் பற்றி ஒரு முறை அவர் என்னை பாடலாக படிக்க சொன்னது இன்றும் என் நினைவில் உள்ளது.
"போல அன்ன ஒப்ப புரைய மான கடுப இயைப ஏற்ப நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத்துருபே"

அதேபோல் ஒரு செய்யுள்... நளன் தமயந்தி என்று நினைக்கிறேன்..
பனியால் நனைந்தும் வெயிலால் உலர்ந்தும் பசியால் அலைந்தும் உலவா 
அநியாய வெங்கை அரவால் இறந்த அதிபாவம் என்கொல் அறியேன் 
தனியே கிடந்து விட நோய் செறிந்து தரைமேல் உருண்ட மகனே 
இனி யாரை நம்பி உயிர் வாழ்வோம் எந்தன் இறையோனும் நானும் அவமே ....

இந்த செய்யுளை அவர் உணர்ச்சி ததும்ப எங்களுக்கு நடத்திய போது எங்கள் கண்ணில் நீர் கசிந்தது இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.

அடுத்து திருஅருட்பா போட்டி பற்றி இங்கு சொல்ல நான் கடமை பட்டிருக்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் நடக்கும் இசை போட்டியில் எனக்கு நிச்சயம் ஒரு பரிசு உண்டு. எனது திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்ட அளவில் நடந்த திருஅருட்பா போட்டி நடந்தது. என்னை போல் சில நேரம் என்னை விட நன்கு பாடக்கூடிய மாணவிகள் இருக்க போட்டிக்கு எனது பெயரை பள்ளியின் சார்பாக அவர் முன் மொழிந்தார்.

எனக்கோ சிறிது பயமாக போய்விட்டது. என்னை ஊக்குவித்து என்னை சிறப்பாக பாட வைத்த பெருமை அவரையே சாரும். எனக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு வாங்கி தந்த பாடல் இதுதான்.

"ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் 
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் 
பெருமையுடன் நினது திருப் புகழ் பேச வேண்டும் 
பொய்மை பேசாதிருக்க வேண்டும் 
பெரு நெறி பிடித்தொழுக வேண்டும் 
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் 
மருவு பெண்ணாசையை மறக்க வேண்டும் 
உன்னை மறவாதிருக்க வேண்டும் 
மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் 
நோயற்ற வாழ்வை நான் வாழ வேண்டும் 
தரும மிகு சென்னையில் கந்த கோட்டத்தில் வளர் தலமோங்கு கந்தவேலே!
சண்முக துய்ய மணி இன்முக செய்வ மணி ஷண்முக துய்ய மணியே!"

அவர் எனக்கு கற்பித்த விதம் என்னை மிக இலகுவாக போட்டியில் பாட வைத்ததும் அல்லாமல் எனக்கு மாவட்ட அளவில் முதல் பரிசும் பெற்று தந்தது என்னால் மறக்க இயலாத ஒன்று.
 
அவர் கூறும் மேற்கோள்கள் மிகவும் விசித்திரமானவை. அந்தந்த  கால கட்டத்தில் வந்த தமிழ் திரைப்பட வசனங்களை மேற்கோள் காட்டி பேசுவார். எல்லா படங்களும் பார்த்துவிடுவார். இப்படி அவர் நடத்தும் பாடங்கள் மாணவர்கள் மனதில் பசுமரத்து ஆணி போல பதிந்து விடும்.

நாங்கள் பத்தாவது படிக்கும் பொழுது பொது தேர்வுக்கு முன்பு மாணவர் மன்றம் நடத்தும் தமிழ் தேர்வு நடக்கும். திரு தி-இரா அய்யாவின் மாணவனாக நான் மாணவர் மன்ற தமிழ் தேர்வில் மாவட்டத்தில் முதல் மாணவனாக 91 மதிப்பெண் எடுத்து அவருக்கு சமர்பித்தேன்.

20 ஆண்டுகள் கழித்து எனது பெற்றோரின் சதாபிஷேக (80 வயது) நிகழ்ச்சிக்கு அவர் வந்த பொழுது இதை என் மனைவியிடம் நினைவு கூர்ந்தார்.

மேன்மக்கள் மேன்மக்கள் தான் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.

திரு சடாக்ஷரம் மற்றும் திரு தி-இரா அய்யா இருவருக்கும் எனது சிரம்தாழ்த வணக்கங்கள்.