Sunday 26 January 2014

பாவங்கள்

பாவங்கள் 

 பொய், புளுகு, பித்தலாட்டம், புறம் பேசுவது, ஏமாற்றுவது என்பதெல்லாம் பாவங்கள் என்று நம் பெரியோர்கள் சொல்லி இருக்கின்றனர். பாவங்களில் பெரிய பாவம் துரோகம் செய்வது. நம்பிக்கை துரோகம் செய்தவர்க்கு குரூர திருப்தியை தரலாம் என்றாலும் அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும். நமக்கு உண்டாகும் நன்மை தீமைகளுக்கு நாமே பொறுப்பு. சில வேளைகளில் பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்கள் நம்மை தொடர்வதாகவும் தோன்றும். ஆனாலும், இந்த ஜென்மத்தில் நாம் குறைந்த பட்சம் ஒரு மனிதத்துவதுடன் நடந்து கொண்டாலே போதும். நமது பாவக் கணக்கு சேராமல் பார்த்துக் கொள்ளலாம். ஒரு பாவத்திற்கு பரிகாரம் என்பது நமது மன சாந்திக்காக வேண்டி இருக்கலாமே தவிர அதுவே மாற்றாக முடியாது.
 
எல்லா தர்மங்களும் பாவத்தின் சம்பளமாக மரணத்தை காட்டுகின்றன. அந்த மரணம் சிலருக்கு சுலபமாகவும், சிலருக்கு மிகுந்த சிரமத்துடனும் மேலும் சிலருக்கு எப்போது வாய்க்கும் வந்தால் நல்லது என்று ஏங்க வைக்கும்.

பாவத்திற்கு செய்யப்படும் பரிகாரம் நமது பாவத்தின் தீவிரத்தை 10-20% மட்டுமே குறைக்கக் கூடும். மீதி 80% பாவம் நம் கணக்கில் வரவில்தான் இருக்கும். நாம் செய்யும் நல்ல காரியங்கள் நமக்கு பயன் தருவதை விட நம் சந்ததியருக்கு தான் அதிக பயன் தரும். ஆனால் நாம் செய்யும் பாவத்திற்கு நாமே பொறுப்பு.

என்னடா இவன் பெரிய பெரிய வார்த்தைகளை சொல்கிறானே என நினைக்க  வேண்டாம். இங்கு நான் சொல்வது எல்லாமே என்னுடைய கருத்துக்கள் தான்.   வாசிப்பவருக்கு இதில் மாற்றுக் கருத்து இருக்கலாம், இருக்கும் என்பதை நான் அறிவேன்.

துரோகம் என்பது நாம் பிறருக்கு இழைக்கும் பொழுது நமக்கு அது சரியென்று தோன்றும். மூன்றாவது மனிதர் மற்றொரு மனிதருக்கு செய்யும் பொழுது நமக்கு அது சில சமயம் தவறுபோலவும் சில சமயம் சரி என்றும் தோன்றும். நாம் பாதிக்கப் படும் பொழுது அல்லது அந்த காட்சியில் நாமும் ஒரு பாத்திரமாக இருக்கும் பொழுது அது மாபெரும் தவறாக தோன்றும். பிறரை நாம் நிந்திக்கும் அல்லது குற்றம் சொல்லும் பொழுது சம்பந்தப் பட்டவரின் நிலையில் நம்மை இருத்தி நமது திருவாயை திறக்கும் முன் ஒன்றுக்கு பலமுறை யோசித்தல் நலம்.

மரியாதை என்பது பயத்தால் வந்தால் அது போலியானதாக இருக்கும்.ஆத்மார்த்தமாக மனதின் அடி ஆழத்திலிருந்து அது வர வேண்டும். அன்பும் அப்படித்தான். நேரில் பார்க்கும் பொழுது ஒரு பேச்சு, பின்னால் ஒரு பேச்சு என்று இருந்தால் அந்து உண்மையான அன்பாக முடியாது. "கெட்டிக்காரன் புளுகு எட்டுநாள்" என்று சொல்வார்களே அது போலத்தான்.
 
காட்டில் வலிமையான மிருகம் பிற மிருகங்களை அடக்கி ஆளும். சமூகத்தில் பெரிய ரௌடி, தாதாவாக இருப்பவர் பிறரை பயமுறுத்தி அடக்க நினைப்பார். பெரிய குடும்பங்களில் வாரிசுகளில் சிலர் பண பலம் மிக்கவராக இருக்கும் பட்சத்தில் அவரது சொல், ஆதிக்கம் மேலோங்கி நிற்கும். அவரது பேச்சுக்கு யாரும் எதிர் பேச்சு பேச மாட்டார்கள். இதுவே அவர்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு தனக்கு அந்த குடும்பத்தில் பெரிய செல்வாக்கு இருப்பதாக இறுமாந்து கொள்வார்கள். பிறர் அமைதி காப்பதற்கு காரணம் பல இருக்கலாம் - நாயை அடிப்பானேன் என்று ஒதுங்கி இருக்கலாம். அல்லது விநாசகாலே விபரீத புத்தி - அவரர் செய்யும் பாவம் அவர்கள் அனுபவிப்பார்கள் என்று எண்ணி அமைதியாக இருக்கலாம்.
 
ஆனாலும்  தவறு செய்பவர்களுக்கு இருக்கும் இறுமாப்பும், அகந்தையும், ஆணவமும் அவர்கள் புத்தியை மறைத்து விடும். பிறர் தன்னிடம் பயப்படுவது போல் தோன்றுவது அல்லது தான் எது சொன்னாலும் அங்கு மறுபேச்சு இருப்பதில்லை என்ற எண்ணம் இவர்களை மேலும் மேலும் இதுபோன்ற துஷ்ட செயல்களை செய்யத் தூண்டும்.

பணக்காரன் செய்யும் துரோகம் சமூகத்தை ஏமாற்றி பணம் சேர்ப்பது. அவ்வாறு சேர்த்த பணத்தை கொண்டு பிறகு சமூக சேவைகள் செய்தால் தான் செய்த பாவங்கள் சரி செய்யப்படும் என்று தனக்கு தானே சப்பைக்  கட்டு கட்டிக் கொள்வது. அரசியல் வாதிகள் செய்யும் துரோகம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அவரை முள் படுக்கையில் கிடத்தும். மேலும் சிலர் மனசாட்சிக்கு துரோகம் செய்வர். அவர் மனம் தான் செய்வது தவறு என்பதை சுட்டிக் காட்டும் ஆனாலும் அவரது அகம்பாவம் அதற்கு ஒரு பொய்யான காரணம் கற்பித்து மனம் சொல்வதை மழுங்க அடிக்கும். போகப் போக மனது மௌனம் சாதிக்க ஆரம்பித்து அகம்பாவ சுபாவம் மேலோங்கி மேலும் மேலும் அவரை பிறருக்கு தீங்கு செய்விக்க தூண்டும்.

ஆனாலும் வினை விதைத்தவன் வினை அறுத்துத் தான் ஆகவேண்டும். பிறருக்கு துன்பம் செய்யும் பொழுது அதனால் ஏற்படும் பாதிப்புகள்  பூமராங் போல செலுத்தியவரை தாக்கும் வல்லமை கொண்டது. பெற்றவர் செய்யும் பாவம் பிள்ளைகளை தாக்கும். பிறருக்கு நாம் ஒரு தீங்கு செய்ய முனையும் பொழுது கொஞ்சம் தனது பிள்ளைகளை நினைத்துக் கொள்வது நல்லது. ஒன்றுக்கு நூறு முறை யோசித்து செய்வது உத்தமம். கோபத்தில், ஆத்திரத்தில், அவசரத்தில் நாம் செய்யும் எந்த செயலும்  நமக்கு எதிராகவே திரும்பும். அப்போது அறிவு செயலிழந்து இருக்கும்.

நம் வாயை விட்டு உதிரும் தீய சொற்களுக்கு நாம் எஜமானர் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஒளி வட்டம் (aura ) உண்டு, கடவுளர் படத்தில் பின்னால் தெரியுமே அதுபோல. நாமும் கடவுள்தான் நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும் நம்முடன் இருக்கும் வரை. நமது உள்ளத்தில் எழும் தீய எண்ணங்கள் நமது ஒளிவட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக இருளடைய வைக்கும். வலைப் பதிவை நிறைவு செய்யும் முன் நம்பிக்கை துரோகம் பற்றி ஒரு குட்டிக் கதை ஒன்று கூறி நிறைவு செய்கிறேன்.

வறுமையை காரணம் காட்டி ஒரு குட்டி ஆடு பெற்றோரை ஏமாற்றியது. சிறு வயதில் குட்டி ஆடு உடல் சுகவீனப் பட்டு சிறிது ஊனமுற்றது. பாவ பரிதாபப் பட்டு குட்டி ஆட்டுக்கு பெற்றோர் அதிக சலுகையும் அன்பும் காட்டினர். உடன் பிறந்த ஆடுகளும் குட்டி மீது பிரியம் கொண்டு இருந்தன. குட்டி ஆடு இந்த சலுகையை நிரந்தரமாக பெற இல்லாத தில்லு முல்லுகளை செய்தது. பெற்றோரையும் மற்றவரையும் எளிதில் ஏமாற்றியது. கொஞ்ச நாள் கழித்து குட்டி ஆட்டுடன் ஒரு குள்ள நரி ஜோடி சேர்ந்தது. குள்ளநரி பொய்யும் புளுகும் சொல்லி குட்டி ஆட்டின் பெற்றோரை ஏமாற்ற ஆரம்பித்தது.

குள்ளநரியின் கையாலாகத்தனம் குட்டி ஆட்டை வறுமைக்கு தள்ளியது. இந்த முறை குட்டி ஆடு வறுமையை சொல்லி பெற்றோரிடம் அழ, பெற்றோரும் உடன் பிறந்த மற்றோரும் குட்டி ஆட்டுக்கு உதவி செய்ய  ஆரம்பித்தனர். குள்ளநரி தனது குணத்தை மறைத்து ஆட்டுத் தோல் போர்த்தி தானும் ஒரு நல்ல ஆடு போல வளைய வந்தது.

ஆட்டின் சுற்றம் கண்மூடித் தனமாக குட்டி ஆட்டை ஆதரித்து குட்டி ஆட்டின் பேச்சை கேட்டு பாவம் பரிதாபம் பார்த்து உருகியது. நரியின் உண்மை தெரிந்த ஓரிரு ஆடுகள் விலகி நின்று நடக்கும் நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்தது. விலகிய சுற்றம் மேல் அடுக்கடுக்காக  குற்றம் சுமத்தி ஆடும் நரியும் ஆட்டம் போட்டன. சந்தர்ப்பத்தை பயன் படுத்தி ஆட்டின் பெற்றோரையும் சுற்றத்தையும் ஏமாற்றி செல்வமும் சொத்தும் சேர்த்தன. உழைத்த காசே ஒட்டாத இந்த காலத்தில் ஏமாற்றி சேர்த்த காசு என்ன செய்யும்? ஆடு செய்த பாவம் எனும் பூமராங் திரும்பி வந்து ஆட்டை தாக்கியது. நரிக்கோ ஏகப்பட்ட சந்தோசம். நல்ல வாய்ப்பு கிடைத்தது, கறக்க முடிந்தவரை செல்வம் கறக்க  முடிவு செய்தது.

ஆட்டின் குடும்பத்தை நரி உணர்வு பூர்வமாக தாக்கியது. எப்போது பார்த்தாலும் இல்லை பாட்டு பாடி முடிந்தவரை செல்வம் சேர்த்தது. குட்டி ஆடு அல்பாயுசில் போக, நரி தனது உண்மை உருவத்தை காட்டியது. ஆட்டின் குடும்பத்துடன் உறவை துண்டித்துக் கொண்டு கடவுள் பெயரை சொல்லி சாமியாரைப் போல நாடகம் ஆடியது. உண்மை உணர்ந்த ஆட்டின் குடும்பமோ  செய்வது அறியாது திகைத்து நின்றது.

நரிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இவ்வளவு சீக்கிரம் அதன் சாயம் வெளுக்கும் என்று அது நினைத்துக் கூட பார்க்கவில்லை. தான் சாமியார் ஆகி விட்டதாகவும் இனி தனது குட்டிகளை சுற்றம் தான் கரையேற்ற வேண்டும் என்று கட்டளை இடும் தொனியில் சொல்லி தப்பிக்க முயன்றது. சுற்றம் செய்வதறியாது திகைத்தது. கடைசி வரை நரி உணரவே இல்லை அது செய்த பாவங்களும் நம்பிக்கை துரோகமும் அதன் குட்டிகளை தாக்கும் என்று. நரி அப்பொழுதும் தனது சுயநலத்தையே யோசித்தது. உதவிய ஆடுகளோ ஒன்றும் செய்யத் தோன்றாமல் திகைத்து நின்றன.
 
நீதி :
ஏமாற்றுபவன் குற்றவாளி என்றால், ஏமாறுபவனும் குற்றவாளிதான்.



மீண்டும் பேசுவோம்