Wednesday 1 January 2014

நினைவலைகள்

1998

எனது அம்மாஞ்சி (மாமா மகன்) ஸ்ரீகாந்த் விஸ்வநாதனுக்கு நன்றி.
இந்த படம் 1988 இல் எனது சகோதரி ஹேமாவின் திருமணத்தின் பொழுது எடுக்கப்பட்டது. இடம் கணேஷ் மண்டலி கல்யாண மண்டபம், நங்கநல்லூர், சென்னை 
நிற்பது  : (இடமிருந்து வலம்) விஸ்வேஸ்வரன் கௌரிஷங்கர், ரம்யா ஆனந்த், கோகுல் ஸ்ரீனிவாசன், மீனா கார்த்திக்,
நடுவில் நான் (ஸ்ரீ முகி)
என் மடியில் கோபமாய் இருப்பது கார்த்திக் லக்ஷ்மினரயணன் - சிரிப்பது வினோத் பாலசுப்ரமணியன் 
 

நான் வியந்த முதல் மனிதர் - SUPER STAR

 சூப்பர் ஸ்டார் ரஜினி  

எனது முதல் பதிப்பாக நான் வியந்த ஒரு மனிதரை பற்றி சொல்ல ஆசைப்படுகிறேன். இவரை பற்றி எல்லாருக்கும் மிக நல்லாகவே தெரியும். நான் புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை. ஆனாலும் என்னுள் இவர் உண்டாக்கிய தாக்கம் பற்றி இங்கு சொல்ல ஆசைப்படுகிறேன்.
 
1976 - எனக்கு 10 வயது. அந்த காலத்தில் திரைப்படம் பார்க்க போவது என்பது ஒரு பெரிய சலுகை. எல்லா படமும் பார்க்க அனுமதி இல்லை. படம் சென்சார் பண்ண படுவதை போல, படத்தின் தரம், நடிகர்கள், படம் திரையிடப்படும் திரையரங்கம் ஆகியவற்றை பொறுத்தே எங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
 
அப்படி ஒரு படம் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனக்கு நினைவு தெரிந்து நான் தூங்காமல் முழுதாக பார்த்த படம் அது.  அது தான் மூன்று முடிச்சு படம். கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடித்து. அப்போது ரஜினி வெறும் நடிகர் தான். அதுவும் வில்லன் நடிகர். ஆனாலும் ரஜினியின் நடிப்பு, அவரது ஸ்டைல் என்னை மிகவும் கவர்ந்தது. அதுவரை சினிமாவில் அப்படி ஒன்றும் ஈர்ப்பு இல்லாத எனக்கு ரஜினி ஒரு தாக்கம் உண்டாக்கினார்.
 
விளைவு, எங்கள் கீரனூர் வீட்டு திண்ணையில் இருந்த சிறிய ரூமில் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் ஆரம்பிக்க வைத்தது. எனது அப்பாவுக்கு தெரியாமல், செல்லம்மா பாட்டிக்கு தெரியாமல் ரகசியமாக வைத்திருந்தேன். தினத் தந்தி பேப்பர் மற்றும் குமுதம் ஆனந்த விகடன் பத்திரிக்கைகளில் வந்த ரஜினி படங்களை கத்தரித்து அந்த அறை முழுவதும் ஒட்டி இருந்தேன். வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் பாடலில்  ரஜினி பாடும் வரிகள் "மண வினைகள் யாருடனோ மாயவனின் விதி வகைகள்" வரிகள் ரஜினி பாடும் விதமும் அவரது மானரிசமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அந்தகாலத்தில் எதாவது படம் பார்த்துவிட்டு வந்தால் அதன் கதையை மற்ற நண்பர்களுக்கு சொல்லுவதே ஒரு தனி த்ரில்ல்தான். அந்த வகையில் பட்டாபி, ரவி, வெங்கடேஷ், பட்டாபி தம்பி கணேஷ்  (அப்போது அவனுக்கும் 3 வயது தான் இருக்கும்) ஆகியோருக்கு சொல்லி ரஜினி புராணம் பாடி அவர்களையும் சங்கத்தில் மெம்பெர் ஆக்கினேன். மெம்பெர் ஆவதற்கு ஒவ்வொருவரும் தலா 3 ரஜினி போட்டோ  - பேப்பரில் இருந்தோ அல்லது எதாவது பத்திரிக்கையில் இருந்தோ எடுத்து வர வேண்டும்.

ரஜினிக்கு கற்பூரம் எடுத்து கொண்டாடாத குறைதான். வாரம் ஓரிரு முறை ரஜினி ரசிகர் மன்ற கூட்டம் நடை பெரும். சங்க ரூமில் இடம் இல்லாததால், கிருஷ்ணன் கோவில் வாசலில் உள்ள ண்டபத்திலோ அல்லது வீட்டுக்கு மேலண்ட கொல்லையில் உள்ள கிணற்று மேடையிலோ மீட்டிங் நடைபெறும்.

ரஜினியை பற்றி நாங்கள் படித்த அல்லது இலங்கை வானொலி மூலம் கேட்ட செய்திகளை சுவாரசியமாக பகிர்ந்து கொள்வோம். எங்கள் ரஜினி ரசிகர் மன்றம் இன்று தொடர்ந்து இருந்தால் அது மிகவும் தொன்மையானதாக இருந்திருக்கும்.

எங்கள் ஆர்வத்தை பார்த்து மாடியாத்து கண்ணன் போன்ற எங்கள் ஊர் வாலிபர்கள் சிவாஜி ரசிகர் மன்றம் ஆரம்பித்தனர். ஒரு ஆறு மாதம் ஒரு வருடம் கழித்து ஒரு நாள் எங்களது ரஜினி ரசிகர் மன்றம் கலைக்கப்பட்டது. ரஜினி மனஉளைச்சல் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டது தான் காரணம்.

எனது தந்தையார்  ஒருநாள் பேப்பர் படித்துவிட்டு ரஜினி மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட விஷயம் பற்றி வீட்டில் கூறினார். அதை கேட்ட என் இளைய சகோதரி தம்பி நீ ரசிகர் மன்றம் ஆரம்பித்த நேரம் ரஜினிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது என்று போட்டு உடைக்க, எங்களது ரசிகர் மன்றம் என் அப்பாவால் அப்புறப் படுத்தப்பட்டது. ஆனாலும் சில காலம் ரசிகர் மன்ற நிர்வாகிகள்  ரகசிய கூட்டம் போடுவது தொடர்ந்தது. அதன் பிறகு எங்கள் ரசிகர் மன்ற ரகசிய கூட்டமும் நின்று போனது. ஆனாலும் ரஜினி பற்றிய எங்கள் அபிப்ராயமும், அவர் மீது இருந்த எங்கள் அன்பும், அபிமானமும் குறையவே இல்லை. 

 
 

இனிய துவக்கம்

முகவுரை  

அனைவருக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். எனக்கு சிறு வயது முதல் எழுதுவது பிடிக்கும். என்னுடைய விருப்பங்கள், நான் சந்தித்த நபர்கள், சென்ற இடங்கள், எனது பழைய நினைவுகள், சிறு வயது குறும்புகள் போன்ற பல்வேறு விஷயங்களை பதிவு செய்ய ஒரு வாய்ப்பாக இந்திய வலைப்பதிவை (Blog) பயன் படுத்த விரும்புகிறேன்.