Tuesday 14 January 2014

தாய் எனும் கோவில் (3)

என் அம்மா (3)

 ஐந்து பெண்களை பெற்றவன் ஆண்டி என்பார். என் தாய்க்கோ ஆறு பெண்கள். எப்படி கரை சேர்க்கப் போகிறாள்? எங்கள் குடும்பம் எப்போது சறுக்கும் வேடிக்கை பார்க்கலாம் என கிராமத்தில் சில கழுதைப்  புலிகள் காத்திருந்தன. கழுதை புலி இயற்கையில் ஒரு கோழை. அதனால் தான் புலியுடன் அதற்கு கழுதை என்ற அடை மொழியும் கூட சேர்ந்திருக்கிறது. காட்டிலும் அது பதுங்கி பதுங்கி தான் வாழும்.  எங்கள் கிராமத்து கழுதை புலிகள் என் தந்தைக்கும் அவரது சகோதரருக்கும் சச்சரவு கூட்டி குடும்பத்தை பிரிக்க சூழ்ச்சி செய்து அதில் வெற்றியும் பெற்றனர். ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அதை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.  

கடவுளின் சித்தம் போலும். அடுக்கடுக்காய் கஷ்டங்கள். சங்கடங்கள். சூப்பர் ஸ்டார் பட வசனம் போல 

"ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான் கைவிடமாட்டான்
கெட்டவர்களுக்கு நிறைய கொடுப்பான் ஆனால்  கை விட்டுவிடுவான்" 

உண்மைதான். நிறைய சோதனைகள். நிறைய சங்கடங்கள். இதனால் அம்மா இறை சக்தியை மிக சமீபமாக நெருங்கும் ஆற்றலை பெற்றார். பீஷ்மர் போல தனது இறுதிநாளை நிர்ணயிக்கும் சக்தி அம்மாவிற்கு வந்தது என்றேதான் சொல்ல வேண்டும். பிற்காலத்தில் நடந்த நிகழ்வுகள் எங்களுக்கு இதைத் தான் உணர்த்தியது.

 

ஆனால் கழுதை புலிகளின் நிலையோ வாழும் போதே இறப்பு வரதா என ஏங்கி நரக வேதனை அனுபவித்து வாழ்ந்த  தடமும் இருந்த இடமும்  தெரியாமல் மடிந்தன.

 
பாகப் பிரிவினைக்கு அச்சாரம் போடப்பட்டது 1975-இல் எனது இரண்டாவது சகோதரியின் திருமணத்தில்தான். 76-77இல் அது உச்சக்கட்டம் அடைந்து  செல்லம்மா பாட்டியின் மறைவிற்கு பின் வீடு ரெண்டானது. பாகப்பிரிவினயால் எட்டு கட்டு கிராமத்து வீடு கூறு போடப்பட்டது. வீட்டுக்கு குறுக்கே ஆங்காங்கே தட்டிகளும்  சுவர்களும் வைக்கப்பட்டன. இந்த களேபரங்கள் நடக்கும் பொழுது இரண்டு பெண்களே கரை சேர்திருந்தனர். குஞ்சும் குளவானுமாக மீதம் நான்கு பெண்கள் மற்றும் நான். கண் முன்னே கட்டிக் காத்த வீடு சிதிலமானது குறித்து என் தாய் பட்ட வேதனைகள் கொஞ்சம் நஞ்சமல்ல.
 
அம்மாவால் அனுகூலப் பட்டவர்கள் கூட இந்த இக்கட்டான சூழ்நிலையில் எங்களுக்கு ஆதரவாக பேச முன் வரவில்லை. அம்மா சோறூட்டி வளர்த்த எனக்கு அண்ணன் முறை உள்ள ஒருவரிடம் அம்மா தனது மனக்குறையை சொல்லிக் கொண்டிருந்தார். கையாலாகாத அவன் அம்மாவிற்கு ஆறுதல் சொல்லாமல் தனது பேச்சில் கீழ் கண்ட அமில வார்த்தையைக்  கொட்டினான்.
 
"கவலை படதே சித்தி... எனக்கு தெரிந்த  கன்னிகா மடம் இருக்கிறது உன் பெண்களை அதில் சேர்த்து விடுகிறேன்" என்றான்.  
 
அப்படிப்பட்ட ஒரு அரக்கனைக்  கூட மன்னிக்கும் பெரிய மனசு என் தாயிடம் இருந்தது. எனக்கு அப்போது 11-12 வயசு தான் இருக்கும். அவன் பேசிய வார்த்தையின் முழு அர்த்தமும் அந்த வயதில் எனக்கு புரியவில்லை. ஆனால் பிறகு என் தாய் பட்ட மனவேதனையை பார்த்த பொழுது அவன் பேசியது ஏதோ மிகப் பெரிய தவறு என்று புரிந்தது. எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு அவனது பேச்சை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எவ்வளவு பெரிய கல் நெஞ்சம் கொண்ட கயவன் அவன் என்பது புரிந்தது.   என்னால் அவனை மன்னிக்கவே முடியவில்லை. அந்த நன்றி கெட்ட ஜென்மம் என் தாயிடம் கூறிய வார்த்தை இன்னும் என் மனதில் தீராக் காயமாகவே உள்ளது.
 
ஆனால் என் தாய்க்கு மிகப் பெரிய மனது. பிற்காலத்தில்  அவனையும்  என் தாய் மன்னித்து ஏற்றுக் கொண்டார். அவன் தனது வெட்கங்கெட்ட செயலுக்கு வருந்தினானா என்பது எனக்கு தெரியவில்லை. அப்படி அவன் வருந்தவில்லை என்றால் அவனெல்லாம் வாழவே தகுதி அற்றவன் என்பதே எனது கருத்து.
 
வீட்டில் சொத்துப்  பிரச்சினை வந்த பொழுது அதனால் எனது தாய் பெற்ற மன உளைச்சலை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அப்பாவை தேற்றுவாரா, படுத்த படுக்கையாய் இருந்த பாட்டியைப் பார்ப்பாரா, குடும்ப பாரம் சுமப்பாரா? அம்மா மனதளவில் சுருண்டு போனார். மன அழுத்தம் தாளாது அம்மா ஒருநாள் காணாமல் போனார். நாங்கள் தேடாத இடமில்லை. அம்மா மாயவரம் பேருந்து ஏறி சென்றதை பார்த்ததாக ஒருவர் சொல்ல நானும் பக்கத்து வீடு சீனுவும் மாயவரம் ரயிலடி, பேருந்து நிலையம் எல்லாம் தேடி அலைந்து  பிறகு சேந்தங்குடி துர்க்கை கோவிலில் அம்மாவை கண்டு பிடித்தோம். அந்த இக்கட்டான நேரத்திலும் அம்மாவின் மனது இறை சக்தியை மட்டுமே நம்பி இருந்திருக்கிறது.
 
ஆனாலும் என் தாயின் மன உறுதி, தைரியம், தன்னம்பிக்கை மற்றும்  அவரது  இறைப்பணி அவரை ஒரு சாதனையாளராக இறுதிவரை இருக்க வைத்தது. அவரது அயராத உழைப்பு எங்களை உயர வைத்தது. 
 
என் தாயின் நிலையில் நான் இருந்திருந்தால் நினைக்கவே உள்ளம் பதறுகிறது. உத்தமி சாதித்து காட்டினாள். முப்பது ஆண்டு கழித்து பிரிவினை செய்யப்பட முழு வீடும்   எங்கள் வசம் வந்தது. நாங்கள் எல்லோரும் இன்று நல்ல நிலையில், எங்கள் தாயின் த்யாகத்திற்கும், அன்புக்கும், உழைப் பிற்கும் உதாரணமாக இருக்கிறோம்.
 
உடன் பிறந்தவர்களின்  பாசம், சொந்த பந்தங்களின் மனப்போக்கு முதலியன காலப் போக்கில் மாறலாம். அனால் அம்மாவின் அன்பு மட்டும் நிபந்தனை அற்றது (un conditional love). அதனால் தான் கடவுள் பெண்களுக்கு மட்டும் பிள்ளைப் பேற்றைக் கொடுத்திருக்கிறான் என நினைக்கிறேன். அதை உணர்ந்தவன் உயர்கிறான். உணராதவன் உழல்கிறான். நான் உயர்திருப்பதில் எனக்கு திருப்தி.
 
அம்மா ஒரு வெள்ளந்தி. சிலசமயம் அம்மாவின் வெள்ளந்தி தனத்தை சாக்காக வைத்து சிலர் குடும்பத்தில் கும்மி அடித்ததும் உண்டு. நான் அதில் நிறையவே பாதிக்கப் பட்டிருக்கிறேன். யாரால் எல்லாம் நான் பாதிக்கப் பட்டேனோ அவர்களை விட்டு விலகினேன். அம்மாவின் இறைப் பற்றும், பரோபகாரமும்  வேறு யாருக்கும் வராது. அம்மாவின் கட்டுப்பாடான வாழ்க்கை முறைதான் அவரது உடல் வலிமைக்கு ஆதாரம். அவரது கடவுள் நம்பிக்கைதான் அவருக்கு மன வலிமை கொடுத்திருக்கிறது. இல்லை என்றால் இவ்வளவு பெரிய குடும்பத்தை கட்டிக் காப்பது என்பது ஒரு சாதாரண மனுஷியால் ஆகாத காரியம். 

ஒரு முறை குடும்பத்தில் பாகப்பிரிவினை வந்து அல்லோல்ல கல்லோல்ல பட்டது போதும் இனி இப்படி ஒரு தவறு நம் குடும்பத்தில் நிகழக் கூடாது என்பதில் அம்மா மிக உறுதியாக இருந்தார். எனது முரட்டுத் தனத்தை மனதில் கொண்டு அம்மா பிற்காலத்தில் என்னால் அப்படி ஒரு பிரச்சினை  வரலாம் என்று எதிர் பார்த்தார் போலும். மீண்டும் ஒருமுறை நம் குடும்பத்தில் சொத்துப் பிரச்சினை  வரக் கூடாது அதற்கு ஒருநாளும் நீ காரணமாக இருக்கக் கூடாது இது தான் நீ உன் தாய்க்கு செய்யும் கைம்மாறு என்று என் தாய் என்னிடம் கூறினார். இந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு பாடமாக இருந்தது. பூர்வீக வீடு விற்கப் பட்ட பொழுது கூட மறு பேச்சு பேசாமல் கையெழுத்து போட்டுக் கொடுத்தேன். அம்மாவிற்கு கொடுத்த வாக்கை காப்பாற்றினால் ஆண்டவன் எனக்கு வேண்டியதை கொடுப்பான் என உறுதியாக நம்பினேன். என் அம்மாவே இப்போது எனக்கு கடவுளாய் நின்று என்னை வழி நடத்தி செல்கிறார்.
 
"நான் விதியை ஆணித்தரமாக நம்புகிறேன். நமக்கு கிடைக்க வேண்டியதை யாராலும் தடுக்க முடியாது அதேபோல் நமக்கு என எழுதப் படாததை யாராலும் தர முடியாது"
 
எனது உயர்வும் எனது வாழ்க்கையும் என் கையில் மட்டுமே. எந்த ஒரு விஷயத்திற்கும் வாழ்க்கையில் பிறர் கையை எதிர்பார்க்கக் கூடாது என முடிவெடுத்தேன்.

ஒருமுறை பார்த்தவர்கள் ஆகட்டும், பலநாள் பழகியவர்கள்  ஆகட்டும் அம்மாவை பிடிக்காதவர்கள் என்று  யாருமே இருக்க முடியாது. அப்படி இருக்க என்னை அம்மாவின் எதிரியாக சிலர் சித்தரித்து என்னை அம்மாவிடம்  இருந்து பிரித்தனர். அவர்கள் செய்த அநாகரீகமான செயல்களை மறைத்து என்னையும் என் மனைவியையும் குற்றம் சொல்வதிலேயே குறியாய் இருந்தனர். அம்மாவும் யாருக்கு பரிந்து பேசுவது என புரியாமல் இருதலை கொல்லி எறும்பாக தவித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

அம்மாவிடம் இது குறித்து பேச நேர்ந்த பொழுது அவர்கள் எல்லாம் அப்படித்தான் இருப்பார்கள் உனக்கு வேண்டாம் என்றால் விலகி நில். யாரும் உன் தயவை எதிர் பார்க்கவில்லை என மூஞ்சியில் அடித்தது போல் கூறினார்.  நிதானமாக உட்கார்ந்து யோசித்த பொழுதுதான் அம்மா கூறிய வார்த்தையின் உள் அர்த்தம் எனக்கு சிறிது தாமதமாகவே விளங்கியது. உன் வாழ்க்கை உன் கையில். யாரையும் நம்பாதே! இந்த உலகம் சுயநலம் மிக்கது. நீ இருக்கியா நான் இருக்கேன் என்று இரு அதுதான் அனைவருக்கும் நல்லது என்ற உள் அர்த்தத்தை உணர்ந்தேன். எதிர்பார்ப்புகளே வாழ்க்கையில் விரக்திக்கு காரணம். உள்ளத்தில் பளிச் என ஒரு பல்பு மிக தாமதமாக எரிந்தது. பிற்காலத்தில் பல குடும்ப நிகழ்சிகளில் இது எனக்கு நிதர்சனமாக தெரிந்தது.

நான் எந்தக் காலத்திலும் எனது சுயமரியாதையை இழக்க விரும்ப வில்லை. இதுவும் எனக்கு என் தாய் கற்றுத் தந்த பாடம் தான். அதனால் என்னை திமிர் பிடித்தவன்முரடன் என்று பலர் பேசலாம், நினைக்கலாம். என் வாழ்கையை நான் விரும்பும் வகையில் வாழ எனக்கு உரிமை உண்டு என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இருந்தது இல்லை.

இன்னும் பேசுவேன்  

தாய் எனும் கோவில் (2)

தாய் எனும் கோவில் (2)
  
பெரியக்காவின் திருமணத்தின் பொழுது மாட்டு வண்டியில் விளையாடுகிறேன் என்று வண்டி குடை சாய்ந்து எனக்கு மூக்கில் அடிபட்டு ரத்தம். கல்யாண கலாட்டாவில் இது வேறு . ஒருமுறை தீபாவளி முடிந்து பீசாய் போன வெடிகளை எடுத்து அதன் மருந்தை சேகரித்து அதை கொளுத்தும் பொழுது எனது நெஞ்சில் ஒரு பெரிய தீக்காயம் பட்டது. பிறகு ஒருமுறை சைக்கிளை இரண்டு கையையும் விட்டு விட்டு ஓட்டி மண்ணைக்  கவ்வி முட்டி பேர்ந்தது. அம்மாசை குளத்தில் தாமரை காய் பறிக்க போய் சகதியில் மாட்டி தாமரைக் கொடி  காலெல்லாம் பின்னி கிழித்து கால் ரணகளமானது, பெரிய கோவில் குளத்தில் மதில் மேல் இருந்து குதித்து காலில் உடைந்த கண்ணாடி கிழித்தது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது கதவிடுக்கில் இடது கை கட்டவிரல் மாட்டி விரல் நசுங்கியது. இது தவிர அவ்வப்போது எனக்கு வரும் ஜுரம், அம்மை, கழுத்தில் கழலை, கணை என்று உடல்நிலை சீர்கேடு நிறைய  வந்தது, இவ்வாறு அம்மாவிற்கு நிறைய கஷ்டங்களை கொடுத்துள்ளேன்.

என் அம்மாதான் எனக்கு கேடயம் (firewall). எனது தந்தையின் கோப அஸ்திரங்களில் இருந்து என்னை காப்பாற்றிய கேடயம். ஆனாலும் கண்மூடித்தனமாக எனக்கு பாதுகாப்பு கொடுத்தது இல்லை. கண்டிக்க வேண்டிய நேரத்தில் அடி கொடுக்க வேண்டிய நேரத்தில் அது சரியாக கிடைக்கும்.
இதை தவிர நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் பொழுது எனக்கு மஞ்சள் காமாலை வந்தது. அப்போது இரவு 1 மணி 2 மணி என்று  அகாலத்தில் பேய்ப் பசி எடுக்கும். அம்மா அந்த நேரத்திலும் எழுந்து எனக்கு உணவு ஊட்டியது  என்றும் மறக்கக் கூடியது இல்லை.
எனக்கு சின்ன வயதில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவு. நோயெதிர்ப்பு சக்தி கூடுவதற்கு அம்மா என் மீது தனிக்  கவனம் எடுத்துக் கொண்டார். தினமும் கறந்த பசும் பால், கறந்த சூடு ஆறும் முன் எனக்கு  ஒரு கோப்பை கிடைக்கும். அதேபோல் அம்மா கையால் பிசைந்த பழைய சாதமும் அதற்கு தொட்டுக்கொள்ள கிடைக்கும்  மாவடு அல்லது மோர் மிளகாய் அல்லது ஆவக்காயை மறக்க முடியுமா பெரிய சம்சாரத்திலும் வருடம் முழுவதும் ஒவ்வொரு பண்டிகையும் வீட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். சித்திரை மாதம் தொடங்கி பங்குனி வரை. தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, வரலக்ஷ்மி நோன்பு, கிருஷ்ண ஜெயந்தி, ஆவணி அவிட்டம், தீபாவளி, கார்த்திகை, மார்கழி நோன்பு, பொங்கல் என எனக்கு தெரிந்து வருடம் முழுவதும் கொண்டாட்டம் தான்.  அம்மா முகம் சுளித்து நான் பார்த்ததில்லை. அம்மா தான் செய்யும் ஒவ்வொரு வேலையையும் மிகவும் சிரத்தையோடும் ஒரு அர்ப்பணிப்போடும் செய்வது தான் அவரது சிறப்பு.
 
மார்கழி மாதம் என்றால் வீட்டில் வைபவம்தான். அம்மா செய்யும் பொங்கல் எங்கள் தெருவில் இருந்த கிருஷ்ணன் கோவிலில் நைவேத்யம்  செய்யப்பட்ட பிறகே  நாங்கள் சாப்பிட முடியும். சில சமயம் எனக்குத் தோன்றும். சாமி என்ன சாப்பிடாமலா இருக்கிறது? அல்லது சாமிக்கு நாம் சாப்பாடு போடவில்லை என்றால் அது என்ன கண்ணையா  குத்தி விடும் என்று. ஒரு நாள் அம்மாவிடம் இதை கேட்டேன். அம்மா சொன்ன பதில் - இது  நாம் கடவுளுக்கு நன்றி பாராட்டும் செயல். அவன் நமக்கு தந்ததை அவனுக்கு காட்டுகிறோம். உண்ணச் சொல்லி கூறுகிறோம். குழந்தை தன் கையில் உள்ள சாக்லேட்டை அம்மாவுக்கு தரும். சாக்லேட் வாங்கித் தந்ததே அம்மாதான். ஆனாலும் குழந்தை  அம்மாவுக்கு தரும் பொழுது அம்மா என்ன அதை வாங்கியா சாப்பிடுகிறாள்? அது போலத்தான் என்றார். வாழ்வியல் தத்துவத்தை இதை விட எளிமையாக யாரால் விளக்க முடியும்.
 
பொங்கல் சமயத்தில் அம்மா செய்யும் குழம்பு மீந்து போனால் மறுநாள் அது எரித்த குழம்பாக உருமாறும். அம்மாவின் கை பட்ட அந்த குழம்புக்கு உள்ள ருசியே தனிதான். பழைய சாதத்துடன் எரித்த குழம்பு பேஷ் பேஷ்.எனக்கு சமையல் கற்றுக் கொடுத்தது எனது அம்மா தான். சமையல் மட்டும் அல்ல சிக்கனம், சேமிப்பு போன்றவையும் எனது தாயிடம் நான் கற்ற பாடங்கள், வாசலில் குச்சி ஐஸ் வந்தால் அம்மாவை கெஞ்சி வாங்கி தின்பேன். ஆனால் மாதத்திற்கு ஓரிரு முறை மட்டும் தான் கிடைக்கும். அடிக்கடி கேட்டால் அம்மா எப்பவாவது ஒருமுறை சாப்பிடலாம் குழந்தே, அடிக்கடி சாப்பிட  முடியுமா. நம்ம குடும்ப நிலைமைக்கு இதெல்லாம் கட்டுப்படி ஆகுமா? என்று வீண் செலவை குறைப்பதின் மதிப்பை எனக்கு உணர்த்தினார்..
 
அம்மா மருதாணி அரைக்கும் அழகே அழகுதான். பொறுமையாய் எனக்கும்  கை மற்றும் கால்களில் அம்மா மருதாணி இட்டு விடுவார்.
அம்மா மிகவும் தைரியசாலி. அம்மா பயந்து நான் பார்த்ததே இல்லை. இக்கட்டான நேரங்களில் அம்மா நிலைமையை சமாளிக்கும் அழகே தனி. அம்மாவின் பொறுமை நான் கண்டு வியந்த ஒன்று. அம்மாவிற்கு என்னை மிகவும் பிடிக்கும். நான் தவம் இருந்து பெற்ற பிள்ளை நீ என்று அம்மா பல சந்தர்பங்களில் கூறுவது உண்டு. எனக்கு நினைவு தெரிந்து அம்மாவுக்கு மன வருத்தம் ஏற்படுத்தும் விதமாக நான் நடந்து கொண்டதில்லை. சில சம்பவங்கள் சில சந்தர்ப்பங்கள் என்னை என் அம்மாவின் முன்னால்  குற்றவாளியாக நிறுத்தி இருக்கிறது. அதற்கு சில சந்தர்ப்பவாதிகளின் சதியே காரணம். நான் முன்பே சொன்னது போல கடைக் குட்டியாய் இருந்தது சில நேரங்களில் சாபமாக போனது. அம்மா கண்டிப்பாக அதை நம்பி இருக்க மாட்டார். ஆனாலும் அம்மா சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்திருப்பார் என்பது எனக்கு நன்கு தெரியும். ஒரு காலக்கட்டத்தில் அம்மாவால் என் மீது வைத்த பாசத்தைக்  கூட வெளிப்படையாக காட்ட இயலாத சூழல் இருந்தது என்பது எனக்கு நன்றாக புரிந்தது. நான் தனிமையில் இதை நினைத்து வருந்துவதை தவிர எனக்கு வேறு வடிகால் அமைய வில்லை.


மேலும் பேசுவோம்...

தாய் எனும் கோவில் (1)

தாய் எனும் கோவில் 

 எல்லோரையும் பற்றி  எழுதறே அப்பா...  நம்ம ருக்மணி பாட்டி பத்தி எழுத மாட்டியா? என் மகள் என்னைப் பார்த்துக் கேட்டாள்.  என் தாயை பற்றி எழுத எனக்கும் ஆசைதான். ஆனால்  ஒரு பக்கத்தில் முடிக்கும் விஷயம் இல்லையே. எனக்கு நினைவு  தெரிந்து என் தாயுடன் நான் இருந்த நாட்கள் மிக குறைவே. ஆனாலும் நமக்கு பிரியமான ஒருவருடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் நமக்கு இனிமையானதாகவே இருக்கும். தாய் பற்றி பேசும் பொழுது நான் எனது மனம் திறந்து சில விஷயங்கள் பற்றி கூற வேண்டிய அவசியம் உண்டாகிறது.

என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைத்திருந்தாலும் அவற்றை எல்லாம் புறம் தள்ள வேண்டிய நிர்பந்தம் எனக்கு பல சமயங்களில் இருந்திருக்கிறது. அந்த மாதிரி நேரங்களில் நான் எனது நிலையை எடுத்துக் கூற விரும்பினாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகி இருக்கும் என்பது எனக்கு நிதர்சனமாக தெரியும். ஆகவே அதுபோன்ற நேரங்களில் நான் மௌனம் காத்து எனது கிலேசத்தை மனதிற்குள் போட்டு புதைத்து இருக்கிறேன். எனக்கு அவமானங்களும் ஏமாற்றங்களும் புதிது அல்ல. சிறுவயதில் எனக்கு ஏற்பட்ட நிகழ்வுகள் பிற்காலத்தில் என்னை செப்பனிட உபயோகமாய் இருந்தது. பிறர் மனதை எந்தெந்த விஷயங்கள் புண்படுத்தும் என்பது எனது அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ள எனக்கு கடவுள் கொடுத்த வாய்ப்பாக அவற்றை எடுத்துக் கொண்டேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எனது கூட்டுக்குள் நான் முடங்கிப் போனேன். வீட்டின் கடைக் குட்டி என்பது வரமா சாபமா என்பது இன்று வரை எனக்கு புரியாத ஒரு புதிர் தான்.
 
எல்லாக் குழந்தைகள் போல எனக்கும் என் தாய்தான் இந்த உலகின் முதல் பரிச்சயம். பிற்காலத்தில் அம்மாவை விட்டு நிறைய விலகப்போகிறேன் என்ற காரணத்தாலோ என்னவோ ஆரம்ப காலத்தில் அம்மாவை விட்டு நான் விலகியதே இல்லை. விளையாடிக் கொண்டு இருக்கும் போதே அம்மா ஞாபகம் வந்து விட்டால் தண்ணி குடித்து விட்டு வருகிறேன் என்று கூறி வீட்டுக்கு செல்வேன். அம்மாவுக்கு தெரியும் நான் வந்த காரணம் என்ன என்று. பாட்டியிடம் சில நேரம் சொல்லி என்னை கேலி செய்வார்.

அம்மாவின் பிறந்தகம் பேரளம் அருகில் உள்ள கிள்ளியூர் ஆகும். எங்களுக்கு விடுமுறை கால பொழுது போக்கு என்பது கிள்ளியூர் செல்வது தான். எனக்கு தெரிந்து அம்மாவுக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் என்றல் அது கிள்ளியூர் மாரியம்மனை தரிசனம் செய்வது, மாயவரம் காவேரி ஸ்நானம், சேந்தங்குடி துர்க்கை கோயில் முதலியன. காவிரியில் அம்மா நீச்சல் அடிக்கும் அழகே தனிதான்.

சிலநேரம் அம்மா வெளியூர் செல்ல நேர்ந்தால் எனக்கு தெரியாமல் கொல்லை  வழியாக சென்று விடுவார். பலமுறை நான் மேல் சட்டைக்  கூட போடாமல் அழுதுகொண்டே அம்மா பின்னால் ஓடி இருக்கிறேன். ஒருமுறை எனது சகோதரி லதா என்னை பஸ்ஸில் ஏறவிடாமல் தடுத்த போது அவரை கீழே தள்ளிவிட்டுக் கூட போயிருக்கிறேன். சில வேளைகளில் அம்மா என்னை சமாதானம் செய்துவிட்டு வெளியூர் செல்ல நேரும். அந்த மாதிரி தருணங்களில் அம்மாவின் ஒன்பது கஜ புடவை தான் எனக்கு துணை. வீடு நிறைய மனிதர்கள் இருந்தாலும் அம்மா இல்லை என்றால் அந்த வீடு எனக்கு வெறிச்சோடி இருக்கும். அந்த அம்மாவை விட்டு நான் சிறு வயதிலேயே பிரிந்து செல்ல நேரும் என்று அப்போது நான் நினைத்ததில்லை.

தகவல் பாதுகாப்பு கருத்தரங்குகளில் (Information Security Seminar) பேசும் போது நான் எப்போதும் கூறும் உதாரணம் ஒன்று உண்டு. இணையத்தில் நிறைய பயன்பாடுகள் (utilities) / கருவிகள் (tools) இலவசமாகக் கிடைக்கின்றன. அவை எல்லாம் உண்மையில் இலவசமா என்று பார்த்தால் இல்லை என்றே கூறலாம். ஒன்று அவற்றின் பயன்பாட்டை நம் மூலம் சோதிக்கின்றனர் அல்லது நமக்கு தெரியாமல் ஏதாவது  ட்ரோஜன் அல்லது தீங்கிழைக்கும் குறியீடுகள் (malicious codes) பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்யப்படுகிறது  அல்லது விளம்பர உத்தியாக இருக்கும் என்று அர்த்தம். உலகில் எதிர்பார்ப்பு இல்லாமல் இலவசமாக கிடைக்கும் ஒரே வஸ்து தாயன்பு தான். இதை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன் ஆகையால் இணையத்தில் பாதுகாப்பு முறை பற்றி பேசும் பொழுது தாயன்பு பற்றி உதாரணம் சொல்வது மிகச் சரியான செய்தியாக இருக்கும் என்பது எனது எண்ணம்.

உலகில் தாயைப்  போல நம் மீது அக்கறை உள்ளவர்கள் யாரும் இருக்க முடியாது. பவித்ரா படத்தில் கவிப் பேரரசின் வரிகள் இங்கு எனக்கு நினைவுக்கு வருகிறது :

"விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான் 
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான் 
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை 
சாமி தவித்தான் .... சாமி தவித்தான் ....
தாயைப்  படைத்தான் ...."

உன்னிக்ருஷ்ணனின் குரல், இசைப்புயலின் இசை, கவிபேரரசின் வைர வரிகள் ...... கல் மனதையும் கரைய வைக்கும் கண்களை பனிக்க வைக்கும். தாயை நேசிக்கும் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய ஓர் பாடல்.

அம்மாவின் வார்த்தைகளே எனக்கு வேதம். அம்மா எனக்கு சிறு வயதில் கூறிய அறிவுரைகள் என் மனதில் பசுமரத்து ஆணிபோல் பதிந்தன. இன்றும் அவற்றை கடை பிடித்து வருகிறேன்.

அம்மாவுக்கு பிடித்தது எல்லாம் எனக்கும் பிடித்திருந்தது. என்னை பற்றி/ என் எதிர் காலம் பற்றி என் பெற்றோருக்கு என்ன சந்தேகம் வந்ததோ தெரியவில்லை, என்னை பத்தாம் வகுப்பு முடித்த பிறகு மேலே படிக்க சென்னைக்கு அனுப்பினர். இரண்டும் கெட்டான் வயதில் அடுத்தவர் வீட்டில் தன் பிள்ளை நன்றாய் இருப்பான் என அவர்கள் நினைத்தது சரியா தவறா என்பது எனக்கு தெரியவில்லை. இளமையில் நான் இழந்த சின்ன சின்ன சந்தோஷங்களை நான் இன்று குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்கிறேன். அருண் ஆனந்த் முதல் அனிக்கா வரை அவர்களில் நான் என்னைப் பார்க்கிறேன், என் குழந்தை பருவத்தைப் பார்க்கிறேன்.
 
"நேற்றை மற,  நாளையை  நினையாதே, இன்றைக்காக வாழ் " இதுதான் என் தாயிடம் நான் கற்ற வாழ்வியல் பாடம்.
 
சென்னையில் சகோதரிகள் வீட்டில் ராஜ வாழ்க்கைதான் என்றாலும் அம்மாவின் இடத்தை யாரால் நிரப்ப முடியும்? இதை பற்றி நான் ஒரு முறை பேச நேர்ந்த பொழுது அது திரிக்கப்பட்டு வேறு விதமாக பேசப் பட்டது. என் சகோதரிகட்கு அது மன வருத்தம் தந்தது என்று கேள்விப் பட்டேன். ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது தெரிந்து நான் மௌனம் காத்தேன்.

நான் கைக் குழந்தையாய் இருந்த காலம் தொட்டு கர்நாடக சங்கீதம் கேட்க்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது. எனது சகோதரிகள் திரு ராமலிங்கம் என்னும் நாதஸ்வர வித்வான் இடம் சங்கீதம் பயின்றனர். கேள்வி ஞானத்தில் ஓரளவு சங்கீதம் பயின்றேன். எனது தாய்  மிக அருமையாக பாடக் கூடியவர். அம்மா பாடும் கல்யாண பாடல்களும், நலங்கு மற்றும் ஓடப் பாடல்களும் எங்கள் குடும்பத்தில் மிக பிரசித்தம். 85 வயதில் எங்கள் வினோத் திருமணத்தில் அம்மா பாடிய போஜனம் செய்ய வாருங்கள் இன்னும் என் மனக்கண் விட்டு அகலவில்லை.

சின்ன வயதில் இருந்து எனக்கு உடம்பு படுத்திக் கொண்டே இருக்கும். அந்த நேரங்களில் அம்மாவின் அன்பு ஒன்று மட்டுமே என்னை மீட்டு வந்தது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. சில தருணங்களை இங்கு குறிப்பிட ஆசைப் படுகிறேன்.
 
மனது சிறிது கனமாக இருக்கிறது. மீண்டு வந்து மீண்டும் சொல்கிறேன்......