Tuesday 14 January 2014

தாய் எனும் கோவில் (3)

என் அம்மா (3)

 ஐந்து பெண்களை பெற்றவன் ஆண்டி என்பார். என் தாய்க்கோ ஆறு பெண்கள். எப்படி கரை சேர்க்கப் போகிறாள்? எங்கள் குடும்பம் எப்போது சறுக்கும் வேடிக்கை பார்க்கலாம் என கிராமத்தில் சில கழுதைப்  புலிகள் காத்திருந்தன. கழுதை புலி இயற்கையில் ஒரு கோழை. அதனால் தான் புலியுடன் அதற்கு கழுதை என்ற அடை மொழியும் கூட சேர்ந்திருக்கிறது. காட்டிலும் அது பதுங்கி பதுங்கி தான் வாழும்.  எங்கள் கிராமத்து கழுதை புலிகள் என் தந்தைக்கும் அவரது சகோதரருக்கும் சச்சரவு கூட்டி குடும்பத்தை பிரிக்க சூழ்ச்சி செய்து அதில் வெற்றியும் பெற்றனர். ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அதை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.  

கடவுளின் சித்தம் போலும். அடுக்கடுக்காய் கஷ்டங்கள். சங்கடங்கள். சூப்பர் ஸ்டார் பட வசனம் போல 

"ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான் கைவிடமாட்டான்
கெட்டவர்களுக்கு நிறைய கொடுப்பான் ஆனால்  கை விட்டுவிடுவான்" 

உண்மைதான். நிறைய சோதனைகள். நிறைய சங்கடங்கள். இதனால் அம்மா இறை சக்தியை மிக சமீபமாக நெருங்கும் ஆற்றலை பெற்றார். பீஷ்மர் போல தனது இறுதிநாளை நிர்ணயிக்கும் சக்தி அம்மாவிற்கு வந்தது என்றேதான் சொல்ல வேண்டும். பிற்காலத்தில் நடந்த நிகழ்வுகள் எங்களுக்கு இதைத் தான் உணர்த்தியது.

 

ஆனால் கழுதை புலிகளின் நிலையோ வாழும் போதே இறப்பு வரதா என ஏங்கி நரக வேதனை அனுபவித்து வாழ்ந்த  தடமும் இருந்த இடமும்  தெரியாமல் மடிந்தன.

 
பாகப் பிரிவினைக்கு அச்சாரம் போடப்பட்டது 1975-இல் எனது இரண்டாவது சகோதரியின் திருமணத்தில்தான். 76-77இல் அது உச்சக்கட்டம் அடைந்து  செல்லம்மா பாட்டியின் மறைவிற்கு பின் வீடு ரெண்டானது. பாகப்பிரிவினயால் எட்டு கட்டு கிராமத்து வீடு கூறு போடப்பட்டது. வீட்டுக்கு குறுக்கே ஆங்காங்கே தட்டிகளும்  சுவர்களும் வைக்கப்பட்டன. இந்த களேபரங்கள் நடக்கும் பொழுது இரண்டு பெண்களே கரை சேர்திருந்தனர். குஞ்சும் குளவானுமாக மீதம் நான்கு பெண்கள் மற்றும் நான். கண் முன்னே கட்டிக் காத்த வீடு சிதிலமானது குறித்து என் தாய் பட்ட வேதனைகள் கொஞ்சம் நஞ்சமல்ல.
 
அம்மாவால் அனுகூலப் பட்டவர்கள் கூட இந்த இக்கட்டான சூழ்நிலையில் எங்களுக்கு ஆதரவாக பேச முன் வரவில்லை. அம்மா சோறூட்டி வளர்த்த எனக்கு அண்ணன் முறை உள்ள ஒருவரிடம் அம்மா தனது மனக்குறையை சொல்லிக் கொண்டிருந்தார். கையாலாகாத அவன் அம்மாவிற்கு ஆறுதல் சொல்லாமல் தனது பேச்சில் கீழ் கண்ட அமில வார்த்தையைக்  கொட்டினான்.
 
"கவலை படதே சித்தி... எனக்கு தெரிந்த  கன்னிகா மடம் இருக்கிறது உன் பெண்களை அதில் சேர்த்து விடுகிறேன்" என்றான்.  
 
அப்படிப்பட்ட ஒரு அரக்கனைக்  கூட மன்னிக்கும் பெரிய மனசு என் தாயிடம் இருந்தது. எனக்கு அப்போது 11-12 வயசு தான் இருக்கும். அவன் பேசிய வார்த்தையின் முழு அர்த்தமும் அந்த வயதில் எனக்கு புரியவில்லை. ஆனால் பிறகு என் தாய் பட்ட மனவேதனையை பார்த்த பொழுது அவன் பேசியது ஏதோ மிகப் பெரிய தவறு என்று புரிந்தது. எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு அவனது பேச்சை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எவ்வளவு பெரிய கல் நெஞ்சம் கொண்ட கயவன் அவன் என்பது புரிந்தது.   என்னால் அவனை மன்னிக்கவே முடியவில்லை. அந்த நன்றி கெட்ட ஜென்மம் என் தாயிடம் கூறிய வார்த்தை இன்னும் என் மனதில் தீராக் காயமாகவே உள்ளது.
 
ஆனால் என் தாய்க்கு மிகப் பெரிய மனது. பிற்காலத்தில்  அவனையும்  என் தாய் மன்னித்து ஏற்றுக் கொண்டார். அவன் தனது வெட்கங்கெட்ட செயலுக்கு வருந்தினானா என்பது எனக்கு தெரியவில்லை. அப்படி அவன் வருந்தவில்லை என்றால் அவனெல்லாம் வாழவே தகுதி அற்றவன் என்பதே எனது கருத்து.
 
வீட்டில் சொத்துப்  பிரச்சினை வந்த பொழுது அதனால் எனது தாய் பெற்ற மன உளைச்சலை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அப்பாவை தேற்றுவாரா, படுத்த படுக்கையாய் இருந்த பாட்டியைப் பார்ப்பாரா, குடும்ப பாரம் சுமப்பாரா? அம்மா மனதளவில் சுருண்டு போனார். மன அழுத்தம் தாளாது அம்மா ஒருநாள் காணாமல் போனார். நாங்கள் தேடாத இடமில்லை. அம்மா மாயவரம் பேருந்து ஏறி சென்றதை பார்த்ததாக ஒருவர் சொல்ல நானும் பக்கத்து வீடு சீனுவும் மாயவரம் ரயிலடி, பேருந்து நிலையம் எல்லாம் தேடி அலைந்து  பிறகு சேந்தங்குடி துர்க்கை கோவிலில் அம்மாவை கண்டு பிடித்தோம். அந்த இக்கட்டான நேரத்திலும் அம்மாவின் மனது இறை சக்தியை மட்டுமே நம்பி இருந்திருக்கிறது.
 
ஆனாலும் என் தாயின் மன உறுதி, தைரியம், தன்னம்பிக்கை மற்றும்  அவரது  இறைப்பணி அவரை ஒரு சாதனையாளராக இறுதிவரை இருக்க வைத்தது. அவரது அயராத உழைப்பு எங்களை உயர வைத்தது. 
 
என் தாயின் நிலையில் நான் இருந்திருந்தால் நினைக்கவே உள்ளம் பதறுகிறது. உத்தமி சாதித்து காட்டினாள். முப்பது ஆண்டு கழித்து பிரிவினை செய்யப்பட முழு வீடும்   எங்கள் வசம் வந்தது. நாங்கள் எல்லோரும் இன்று நல்ல நிலையில், எங்கள் தாயின் த்யாகத்திற்கும், அன்புக்கும், உழைப் பிற்கும் உதாரணமாக இருக்கிறோம்.
 
உடன் பிறந்தவர்களின்  பாசம், சொந்த பந்தங்களின் மனப்போக்கு முதலியன காலப் போக்கில் மாறலாம். அனால் அம்மாவின் அன்பு மட்டும் நிபந்தனை அற்றது (un conditional love). அதனால் தான் கடவுள் பெண்களுக்கு மட்டும் பிள்ளைப் பேற்றைக் கொடுத்திருக்கிறான் என நினைக்கிறேன். அதை உணர்ந்தவன் உயர்கிறான். உணராதவன் உழல்கிறான். நான் உயர்திருப்பதில் எனக்கு திருப்தி.
 
அம்மா ஒரு வெள்ளந்தி. சிலசமயம் அம்மாவின் வெள்ளந்தி தனத்தை சாக்காக வைத்து சிலர் குடும்பத்தில் கும்மி அடித்ததும் உண்டு. நான் அதில் நிறையவே பாதிக்கப் பட்டிருக்கிறேன். யாரால் எல்லாம் நான் பாதிக்கப் பட்டேனோ அவர்களை விட்டு விலகினேன். அம்மாவின் இறைப் பற்றும், பரோபகாரமும்  வேறு யாருக்கும் வராது. அம்மாவின் கட்டுப்பாடான வாழ்க்கை முறைதான் அவரது உடல் வலிமைக்கு ஆதாரம். அவரது கடவுள் நம்பிக்கைதான் அவருக்கு மன வலிமை கொடுத்திருக்கிறது. இல்லை என்றால் இவ்வளவு பெரிய குடும்பத்தை கட்டிக் காப்பது என்பது ஒரு சாதாரண மனுஷியால் ஆகாத காரியம். 

ஒரு முறை குடும்பத்தில் பாகப்பிரிவினை வந்து அல்லோல்ல கல்லோல்ல பட்டது போதும் இனி இப்படி ஒரு தவறு நம் குடும்பத்தில் நிகழக் கூடாது என்பதில் அம்மா மிக உறுதியாக இருந்தார். எனது முரட்டுத் தனத்தை மனதில் கொண்டு அம்மா பிற்காலத்தில் என்னால் அப்படி ஒரு பிரச்சினை  வரலாம் என்று எதிர் பார்த்தார் போலும். மீண்டும் ஒருமுறை நம் குடும்பத்தில் சொத்துப் பிரச்சினை  வரக் கூடாது அதற்கு ஒருநாளும் நீ காரணமாக இருக்கக் கூடாது இது தான் நீ உன் தாய்க்கு செய்யும் கைம்மாறு என்று என் தாய் என்னிடம் கூறினார். இந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு பாடமாக இருந்தது. பூர்வீக வீடு விற்கப் பட்ட பொழுது கூட மறு பேச்சு பேசாமல் கையெழுத்து போட்டுக் கொடுத்தேன். அம்மாவிற்கு கொடுத்த வாக்கை காப்பாற்றினால் ஆண்டவன் எனக்கு வேண்டியதை கொடுப்பான் என உறுதியாக நம்பினேன். என் அம்மாவே இப்போது எனக்கு கடவுளாய் நின்று என்னை வழி நடத்தி செல்கிறார்.
 
"நான் விதியை ஆணித்தரமாக நம்புகிறேன். நமக்கு கிடைக்க வேண்டியதை யாராலும் தடுக்க முடியாது அதேபோல் நமக்கு என எழுதப் படாததை யாராலும் தர முடியாது"
 
எனது உயர்வும் எனது வாழ்க்கையும் என் கையில் மட்டுமே. எந்த ஒரு விஷயத்திற்கும் வாழ்க்கையில் பிறர் கையை எதிர்பார்க்கக் கூடாது என முடிவெடுத்தேன்.

ஒருமுறை பார்த்தவர்கள் ஆகட்டும், பலநாள் பழகியவர்கள்  ஆகட்டும் அம்மாவை பிடிக்காதவர்கள் என்று  யாருமே இருக்க முடியாது. அப்படி இருக்க என்னை அம்மாவின் எதிரியாக சிலர் சித்தரித்து என்னை அம்மாவிடம்  இருந்து பிரித்தனர். அவர்கள் செய்த அநாகரீகமான செயல்களை மறைத்து என்னையும் என் மனைவியையும் குற்றம் சொல்வதிலேயே குறியாய் இருந்தனர். அம்மாவும் யாருக்கு பரிந்து பேசுவது என புரியாமல் இருதலை கொல்லி எறும்பாக தவித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

அம்மாவிடம் இது குறித்து பேச நேர்ந்த பொழுது அவர்கள் எல்லாம் அப்படித்தான் இருப்பார்கள் உனக்கு வேண்டாம் என்றால் விலகி நில். யாரும் உன் தயவை எதிர் பார்க்கவில்லை என மூஞ்சியில் அடித்தது போல் கூறினார்.  நிதானமாக உட்கார்ந்து யோசித்த பொழுதுதான் அம்மா கூறிய வார்த்தையின் உள் அர்த்தம் எனக்கு சிறிது தாமதமாகவே விளங்கியது. உன் வாழ்க்கை உன் கையில். யாரையும் நம்பாதே! இந்த உலகம் சுயநலம் மிக்கது. நீ இருக்கியா நான் இருக்கேன் என்று இரு அதுதான் அனைவருக்கும் நல்லது என்ற உள் அர்த்தத்தை உணர்ந்தேன். எதிர்பார்ப்புகளே வாழ்க்கையில் விரக்திக்கு காரணம். உள்ளத்தில் பளிச் என ஒரு பல்பு மிக தாமதமாக எரிந்தது. பிற்காலத்தில் பல குடும்ப நிகழ்சிகளில் இது எனக்கு நிதர்சனமாக தெரிந்தது.

நான் எந்தக் காலத்திலும் எனது சுயமரியாதையை இழக்க விரும்ப வில்லை. இதுவும் எனக்கு என் தாய் கற்றுத் தந்த பாடம் தான். அதனால் என்னை திமிர் பிடித்தவன்முரடன் என்று பலர் பேசலாம், நினைக்கலாம். என் வாழ்கையை நான் விரும்பும் வகையில் வாழ எனக்கு உரிமை உண்டு என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இருந்தது இல்லை.

இன்னும் பேசுவேன்  

No comments:

Post a Comment

உங்கள் விமர்சனம்/ கருத்துக்கள் அளித்து எனக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்