Wednesday 15 January 2014

தாய் எனும் கோவில் (4)

தாய் எனும் கோவில் (4)

என் பிள்ளை நன்றாக வரவேண்டுமே என்று என் அம்மாவின் தவம். எனக்கு நன்றாகவே புரிந்தது. என் எதிர் காலம் பற்றி எனக்கு  பயமே இருந்ததில்லை. காரணம் என் தாயின் பாசம், அன்பு என்னுடன் இருக்கும் பொழுது எனக்கு நல்லவை தவிர வேறு நடக்க சந்தர்ப்பம் இல்லை என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

அம்மாவுடன் நான் கழித்த சில பசுமையான நினைவுகளை பகிர விரும்புகிறேன்.

1989-90
லக்னோவில்  வங்கியில் நான் சேர்ந்த இரண்டாவது வருடம் என் பெற்றோரை அங்கு வரவழைத்தேன். அவர்களை உத்தர் பிரதேசத்தில் உள்ள சில புண்ணிய தலங்களுக்கு அழைத்து செல்ல நினைத்திருந்தேன். அதன் படி லக்னௌவில் இருந்து ஹரித்வார் புறப்பட்டு சென்றோம்.   சங்கர மடத்தில் தங்க ஏற்பாடு செய்திருந்தேன். ஹரித்வாரில் எனது பழைய கான்பூர் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பேச்சு வாக்கில்  ரிஷிகேஷ் மற்றும் பத்ரிநாத் செல்லலாம் என முடிவு செய்தோம். மூன்று கார்களில் 4 குடும்பங்கள் பயணித்தோம்.

நாங்கள் சென்ற கார் டிரைவர் திரு ஷிவ் சிங். உ.பி.காரர். இளைஞர். மலைப்  பாதையில் கார் செல்லும் பொழுது சிறிது தூரம் வரை அம்மா கொஞ்சம் பதட்டமாக இருந்தார். நேரம் செல்லச்  செல்ல அம்மா அந்த இயற்கைச் சூழலை ரசிக்க ஆரம்பித்தார். வழியெல்லாம் தம்பி (அப்படித்தான் என்னை என் அம்மா அழைப்பார்) அண்ணா என்னை காசி, அலஹாபாத், கயா எல்லாம் அழைத்து சென்றான் நீ என்னை பத்ரி அழைத்து செல்கிறாய். என் ஜென்மம் சாபல்யம் அடைத்தது போலிருக்கிறது என்றார். என் தாயை மகிழ்விக்க இறைவன் எனக்கு கொடுத்த வாய்ப்பை எண்ணி  அவனுக்கு நன்றி கூறினேன்.

 ருத்ரபிரயாகில் மந்தாகினி அலக்நந்தா நதிகள்  சங்கமிக்கும் இடம் மிகவும் ரம்யமானது அதே சமயம் மிகவும் ஆபத்தானது. மந்தாகினி நதி அமைதியின் ஸ்வரூபம். பெண்மையின் அம்சம். அலக்நந்தா வீறு கொண்டு எழும் காளை போல ஆண்மையின் ஒரு அம்சமாக ஒரு பிரளயத்தை போல, பிரவாகமாக ஓடி வரும். வரும் வழில் உள்ள பாறைகளையும் கற்களையும் உருட்டிக்கொண்டு வரும். மதகினி பசுமை நிறத்திலும் அலக்  நந்தா வெள்ளை நிறத்திலும் இருக்கும். இரண்டும் சம்கமிக்கும் இடம் மிகவும் ரம்யமாக இருக்கும். 

சங்கமத்தில் குளிக்க ஏதுவாக ஒரு படித்துறை உண்டு. பிடித்துக்கொண்டு குளிப்பதற்கு இரும்பு சங்கிலிகள் அந்த படித்துறை உடன் இணைக்கப்பட்டு இருக்கும். அங்கு குளிக்கச் செல்பவர்கள் சங்கிலியை கையில் பிடித்துக்கொண்டோ அல்லது இடுப்பில் சுற்றி கட்டிக்கொண்டோ தான் குளிக்க வேண்டும். இல்லை என்றால் நதி பிரவாகத்தில் இழுத்துப்  போக வாய்ப்பு உள்ளது.  அம்மாவின் இடுப்பில் சங்கிலி சுற்றி அம்மாவின் ஒரு கையை நான் பிடித்துக்கொண்டு ஸ்நானம் செய்வித்தேன். அன்று அம்மா அடைந்த மகிழ்ச்சி சொல்லில் அடங்காது. 
 
அங்கிருந்து பிறகு ஒவ்வொரு சங்கமாக பார்த்துக்கொண்டு சென்றோம் - கர்ண பிரயாக், தேவப் பிரயாக், நந்தப் பிரயாக் முதலின.

காலை 7:00 மணிக்கு ஹரித்வாரில் இருந்து புறப்பட்ட நாங்கள் இரவு 9:00 மணி அளவில் ஜொஷிமத் சென்று சேர்ந்தோம். அங்கிருந்த ஒரு மடத்தில் தங்கி விட்டு மறுநாள் காலை 5:30 மணிக்கு பத்ரி  புறப்பட்டோம்.  8.00 மணி அளவில் பத்ரி  சென்று சேர்ந்தோம். அங்கிருந்த ஒரு சத்திரத்தில் தங்கி சிறிது ஓய்வு எடுத்த பின் வெந்நீர் ஊற்றில் ஸ்நானம் செய்து பத்ரி நாராயணனை தரிசிக்க சென்றோம். 

பத்ரி கோவிலில் அம்மாவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. பத்ரி நாராயணனுக்கு தன்  கையால் பூஜை செய்யும் பாக்கியம் அம்மாவுக்கு கிட்டியது. அங்கு கோவில் பிரசாதம் வாங்கி சாப்பிட்டு விட்டு மீண்டும் சத்திரம் சென்றோம். பிறகு பத்ரியில் இருந்து கிளம்பி கீழிறங்க ஆரம்பித்தோம். இரவு 7.30 மணி அளவில் வரும் வழியில் நல்ல மழை. டிரைவர் ஒரு கட்டத்திற்கு மேல் போவது ஆபத்தானது, மலை சரியக் கூடும் என்று எச்சரிக்கவும் நாங்கள் ஒரு இடத்தில தங்க உத்தேசித்தோம். ஆனால் அங்கு தங்க வசதியாக எந்த சத்திரமும் இல்லை. அருகில் ஒரு எங்கள் வங்கியின் கிளை இருக்க அங்கிருந்த காவலாளி இடம் என்னை அறிமுக படுத்திக்கொண்டு உதவி கேட்டேன். அவர் எங்களுக்கு அங்கு தங்க வசதி செய்து கொடுத்தார்.  குடிசை போல இருந்தது. எங்கள் கையில் வைத்திருந்த ஷால் மற்றும் கம்பளி ஆடைகள்  கொண்டு குளிரையும் அந்த இரவையும் சமாளித்தோம்.  மறுநாள் காலை அங்கிருந்து கிளம்பி ஹரித்வார் வந்தோம். வரும் வழியில் ரிஷிகேஷில் உள்ள லக்ஷமண்  ஜூலா மற்றும் சாதுக்களின் குகைகளை தரிசனம் செய்தோம்.
 
ஹரித்வாரில் இருந்து லக்னோவிற்கு ரயில் பயணம். எங்களது பயணத் திட்டம் மாறியதால் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்கள் முன்பே ரத்து செய்யப்பட்டது. இரவு ரயிலில் செல்லலாம் என முடிவு செய்து ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரை அணுக அவர் தனது இயலாமையை தெரிவிக்க வேறு வழி இல்லாமல் பொதுப் பெட்டியில் (general compartment) பயணம் செய்ய முடிவு செய்தோம்.
 
பெண்கள் பெட்டி ஓரளவுக்கு காலியாக இருக்க, அம்மாவிற்கு ஒரு நல்ல இடமாய் பார்த்து அவரை உட்கார வைத்தேன். எங்கள் பெட்டிகளை அம்மாவிடம் கொடுத்து விட்டு நானும் என் தந்தையாரும் பொதுப்  பெட்டியில் இடம் தேடிச் சென்றோம். அப்பாவுக்கு மட்டும் ஒரு சீட்டு கிடைக்க, நான் வாசல் படி அருகில் அமர்ந்து பயணம் செய்ய  ஆரம்பித்தேன்.
 
அம்மாவை பெண்கள் பெட்டியில் அமர வைத்து விட்டு வந்தேனே தவிர என் நினைவு முழுதும் அம்மாவிடமே இருந்தது. அம்மாவிற்கு ஹிந்தி வேறு தெரியாது. எப்படி சமாளிக்கிறார்  என்பது தெரியவில்லை. அம்மா அமர்ந்து இருந்த பெட்டிக்கும் எங்கள் பெட்டிக்கும் இடையில் 7-8 ரயில் பெட்டிகள் இருந்தன. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் வண்டி நடை மேடைக்குள் நுழையும் பொழுதே இறங்கி விடுவேன். ஓடிச் சென்று பெண்கள் பெட்டியில் அம்மா இருக்கிறாரா என்று பார்ப்பேன். சில சமயம் அம்மா முழித்துக்கொண்டு இருப்பார். சில சமயம் அம்மா நன்றாக உறங்கிக் கொண்டு இருப்பார். எனக்கு சிறிது நிம்மதியாக இருந்தது. ஆனாலும் அம்மாவை சிரமத்திற்கு உள்ளாக்கியதற்கு மிகவும் வருந்தினேன். காலை 6.00 மணிக்கு பெண்கள் பெட்டியில் அம்மாவை தேடினால் அம்மாவை அங்கு காணவில்லை. நான் பதறிப்போய் விட்டேன். சீட்டுக் அடியில் எங்களது பெட்டிகளையும் காண வில்லை.

 

 

மேலும் சொல்வேன்


No comments:

Post a Comment

உங்கள் விமர்சனம்/ கருத்துக்கள் அளித்து எனக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்