Friday 18 April 2014

காமாக்ஷி விருத்தம்


காமாக்ஷி விருத்தமதை படிக்கும் பொழுது
அம்மா உன்குரல் செவியிலே கேக்குதே
இதயம் வேர்த்து இமைகள் கசியுதே
உன்குரல் இனி நேரில் கேட்க இயலாது
என்றதை நினைக்கையில் மனம் மருகி போகுதே....
என் தாயின் நினைவாக...
காமாக்ஷி  விருத்தம்

மங்களஞ்சேர்   காஞ்சிநகர்  மன்னுகாமாட்சி   மிசை
துங்கமுள  நற்பதிகஞ்  சொல்லவே --   திங்கட்
புயமருவும்  பணியனியும்  பரமனுளந்தனின்   மகிழும்
கயமுகவைங்  கரனிருதாள்   காப்பு.

ஆசிரிய  விருத்தம்

சுந்தரி  சௌந்தரி நிரந்தரி  துரந்தரி
  சோதியாய்  நின்ற  உமையே,
சுக்ர  வாரத்திலுனை  கண்டு  தரிசித்தவர்கள்
 துன்பத்தை  நீக்கி  விடுவாய்,
சிந்தைதனிலுன்  பாதந்  தன்னையே  தொழுபவர்கள்
   துயரத்தை   மாற்றி  விடுவாய்,
ஜெகமெலா  முன்  மாய்கை  புகழவென்னா  லாமோ
   சிறியனால்  முடிந்திடாது.
சொந்தவுன்   மைந்தனா  யெந்தனை  யிரட்சிக்கச்
    சிறிய  கடன்  உன்னதம்மா,
சிவ   சிவ  மஹேஸ்வரி   பரமனிட  யீஸ்வரி
   சிரோன்மணி   மனோன்  மணியுநீ
அந்தரி  துரந்தரி  நிரந்தரி  பரம்பரி
   யனாத   ரட்சகியும்  நீயே,
அழகான   காஞ்சியில்  புகழாக  வாழ்ந்திடும்
  அம்மை   காமாட்சி   யுமையே.                            [ 1 ]


பத்துவிரல்  மோதிரம்  எத்தனை  பிரகாசமது
  பாடகந்   தண்டை   கொலுசும்,
பச்சை  வைடூரியம்  மிச்சையா  இழைத்திட்ட
  பாதச்  சிலம்பினொலியும்
முத்து  மூக்குத்தியும்  ரத்தினப்  பதக்கமும்
   மோகன  மாலை  யழகும்,
முழுதும்  வைடூரியம்   புஷ்பரா  கத்தினால்
   முடிந்திட்ட  தாலி  யழகும்,
சுத்தமாயிருக்கின்ற  காதினிற்   கம்மலுஞ்
  செங்கையிற்  பொன்   கங்கணமும்
ஜெகமெலாம்  விலைபெற்ற  முகமெலா  மொளியுற்ற
  சிறுகாது   கொப்பி   னழகும்
அத்திவரதன்   தங்கை   சக்தி   சிவரூபத்தை
  யடியனாற் சொல்ல  திறமோ
அழகான   காஞ்சியில்  புகழாக  வாழ்ந்திடும்
  அம்மை   காமாட்சி   யுமையே.                             [ 2 ]

கெதியாக வுந்தனைக் கொண்டாடி நினதுமுன்
   குறைகளைச் சொல்லி  நின்றும்,கொடுமையா
யென்மீதில் வறுமையாய் வைத்து நீ
   குழப்பமா யிருப்பதேனோ,
சதிகாரியென்று  நானறியாம லுந்தனைச்  
   சதமாக  நம்பி னேனே,
சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க
   சாதக னக்  கில்லையோ?
மதிபோல வொளியுற்ற புகழ்நெடுங் கரமுடைய
  மதகஜனை யீன்ற தாயே,
மாயனிட  தங்கையே  பரமனது  மங்கையே
   மயானத்தில்   நின்ற  வுமையே
அதிகாரி யென்றுநா னாசையால்  நம்பினேன்
  அன்பு வைத்தென்னை யாள்  வாய்,
அழகான   காஞ்சியில்  புகழாக  வாழ்ந்திடும்
  அம்மை   காமாட்சி   யுமையே.                               [ 3 ]

பூமியிற்  பிள்ளையாய்ப்  பிறந்தும் வளர்ந்துநான்  
  பேரான  ஸ்தலமு மறியேன்,
பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டுநான்
  போற்றிக்  கொண்டாடி  யறியேன்
வாமியென்  றுன்னைச்  சிவகாமி  யென்றே சொல்லி
  வாயினாற்  பாடியறியேன்.
மாதா  பிதாவினது  பாதத்தை  நானுமே
  வணங்கியொரு  நாளுமறியேன்,
சற்குருவின்  பாதார  விந்தங்களைக்  கண்டு
  சாஷ்டாங்க  ெண்டனிட்டறியேன்,
ஆமிந்த   பூமியிலடியனைப்   போல்   மூடன்
  ஆச்சிநீ   கண்ட  துண்டோ,
அழகான   காஞ்சியில்  புகழாக  வாழ்ந்திடும்
  அம்மை   காமாட்சி   யுமையே.                                [ 4 ]


பெற்றதா  யென்றுன்னை  மெத்தவும்  நம்பிநான்
  பிரியமா யிருந்தே னம்மா
பித்தலாட்டக் காரியென்று நானறியாது உன்
  புருஷனை மறந்தே னம்மா,
பக்தனாயிருந்து  உன் சித்தமும்  இரங்காமல்
   பாராமுகம்  பார்த்திருந்தால்
பாலன்  யானெப்படி  விசனமில்  லாமலே
   பாங்குட னிருப்பதம்மா,
இத்தனை மோசங்க ளாகாது ஆகாது
   இது தர்மமல் லவம்மா,
எந்தனை  ரக்ஷிக்க  சிந்தனை  களில்லையோ
   யிது  நீதி   யல்ல  வம்மா
அத்தி  முகனாசையா  லிப்புத்திரனை  மறந்தாயோ
   அதை  யெனக்கருள்   புரிகுவாய்,
அழகான   காஞ்சியில்  புகழாக  வாழ்ந்திடும்
   அம்மை   காமாட்சி   யுமையே.                               [ 5 ]


மாயவன்  தங்கை  நீ  மரகத  வல்லிநீ
     மணிமந்திர   காரிநீயே
மாயசொ  ரூபிநீ   மகேஸ்வரியு   மானநீ
    மலையரை    யன்மக    ளானநீ
தாயே  மீனாட்சிநீ   சற்குண   வல்லிநீ
    தயாநிதி   விசாலாட்சிநீ,
தாரணியில்  பெயர் பெற்ற  பெரிய நாயகியும்நீ
    சரவணனை   யீன்ற  வளும்நீ
பேய்களுடனாடிநீ     அத்தனிட    பாகமதில்
    பேறுபெற    வளர்ந்த   வளும்நீ,
பிரணவசொரூபிநீ   பிரசன்ன   வல்லிநீ
     பிரியவுண்    ணாமுலையுநீ
அகிலாண்டவல்லி    நீயே  
அழகான   காஞ்சியில்  புகழாக  வாழ்ந்திடும்
  அம்மை   காமாட்சி   யுமையே.                               [ 6 ]

பொல்லாத  பிள்ளையாய்  இருந்தாலும்  பெற்றதாய்
    புத்திகளைச்    சொல்லவில்லையோ,
பேய்பிள்ளை   யானாலும்  தான்  பெற்ற  பிள்ளையை
 பிரியமாய்  வளர்க்க  வில்லையோ
கல்லாகிலும்  மூச்சு  நில்லாமல்  வாய்  விட்டுக்
  கதறி  நானழுத   குரலில்,
கடுகதனிலெட்டிலொரு   கூறுவதி  லாகிலுன்
  காதி  னில்   நுழைந்த  தில்லையோ,
இல்லாத  வன்   மங்களென்   மீதிலேனம்மா
    இனி  விடுவதில்லை  சும்மா
இருவரும்  மடிபிடித்துத்  தெருதனில்   வீழ்வது
     இதுதரும    மல்ல   வம்மா,
எல்லாரு   முன்னையே   சொல்லியே  யேசுவார்
      அது   நீதியல்ல   வம்மா,
அழகான   காஞ்சியில்  புகழாக  வாழ்ந்திடும்
  அம்மை   காமாட்சி   யுமையே.                               [ 7 ]

முன்னையோர்   சென்மாந்திர  மேனென்ன  பாவங்கள்
     இம்   மூடன்   செய்தா   னம்மா
மெய்யென்று   பொய்சொல்லி  கைதனிற் பொருள்தட்டி
   மோசங்கள்    பண்ணினேனோ,
என்னமோ  தெரியாது  இக்கணந்  தன்னிலே
   இக்கட்டு   வந்த  தம்மா,
ஏழைநான்   செய்தபிழை   தாய்பொறுத்தருள்   தந்து
     என்கவலை   தீரு   மம்மா.
சின்னங்களாகாது   ஜெயமில்லையோ  தாயே
   சிறுநாண   மாகுதம்மா,
சிந்தனைக  ளென்மீதில்   வைத்து   நற்பாக்கியமருள்
    சிவசக்தி   காமாட்சி  நீ
அன்னவாகனமேறி   யானந்தமாக  வுன்
   அடியேன்  முன்வந்து  நிற்பாய்,
அழகான   காஞ்சியில்  புகழாக  வாழ்ந்திடும்
  அம்மை   காமாட்சி   யுமையே.                               [ 8 ]

எந்தனைப்   போலவே  செனன  மெடுத்தோர்கள்
   இன்பமாய்    வாழ்ந்  திருக்க,
யான்  செய்த  பாவமோ  யித்தனை   வறுமையினுள்
    உன்னடியேன்   தவிப்பதம்மா,
உன்னையே  துணையென்   றுறுதியாய்   நம்பினேன்
    உன்  பாதஞ்   சாட்சியாக
உன்னையன்றி   வேறுதுணை  யினியாரை   யுங்காணேன்
  உலகந்தனி    லெந்தனுக்கு
பிள்ளை  யென்றெண்ணி   நீ  சொல்லாம  லென்வறுமை
  போக்கடித்   தென்னைரட்சி,
பூலோக  மெச்சவே   பாலன்  மார்க்கண்டன்போல்
  பிரியமாய்க்    காத்திடம்மா,
அன்னையே யின்னமுன்ன  டியேனை   ரட்சிக்க
   அட்டி   செய்யா   தேயம்மா,
அழகான   காஞ்சியில்  புகழாக  வாழ்ந்திடும
  அம்மை   காமாட்சி   யுமையே.                               [ 9 ]

பாரதனிலுள்ளவும்  பக்கியத்தோடென்னைப்
  பாங்குட   னிரட்சிக்கவும்
பக்தியாய்   உன்பாதம்   நித்தந்   தரிசித்த
  பாலருக்   கருள்   புரியவும்,
சீர்பெற்ற  தேகத்தில்  சிறுபிணிகள்  வாராமல்
    செங்கலிய   னணு    காமலும்,
சேயனிட  பாக்கியஞ்   செல்வங்களைத்  தந்து
    ஜெயம்  பெற்று  வாழ்ந்து  வரவும்,
பேர்பெற்ற   காலனைப்   பின்தொடர  வொட்டாமற்
    பிரியமாய்க்    காத்திடம்மா,
பிரியமாயுன்மீதில்    சிறுயனான்   சொன்னகவி
   பிழைகளைப்    பொறுத்து   ரட்சி,
ஆறதனில்   மணல்   குவித்  தரியபூசை   செய்தவென்
    னம்மையேகாம்பரி     நீயே,
அழகான   காஞ்சியில்  புகழாக  வாழ்ந்திடும்
  அம்மை   காமாட்சி   யுமையே.                               [ 10 ]

எத்தனை  ஜெனனம்   எடுத்தேனோ  தெரியாது
  இப்பூமி   தன்னி   லம்மா,
இனியாகிலும்   கிருபை  வைத்தென்னை   ரட்சியும்
   இனி   ஜெனன்   மெடுத்   திடாமல்,
முத்திதர   வேணுமென்று   உன்னையே    தொழுதுநான்
    முக்காலும்    நம்பி   னேனே,
முன்பின்னுந்   தோணாத   மனிதரைப்   போலநீ
      முழித்திருக்    காதே   யம்மா,
வெற்றி  பெற  வுன்மீதில்   பக்தியாய்   நான்   சொன்ன
      விருத்தங்கள்    பதினொன்றையும்,
விருப்பமாய்க்   கேட்டு   நீயளித்திடுஞ்   செல்வத்தை
     விமலனா    ரேசப்    போறார்.
அத்தனிட   பாகமதை   விட்டு   வந்தேயென்
     அருங்குறை   யைத்தீரு    மம்மா,
அழகான   காஞ்சியில்  புகழாக  வாழ்ந்திடும்
  அம்மை   காமாட்சி   யுமையே.                               [ 11 ]

               ************************************