Sunday 19 January 2014

நா.ச.சு.ம (3) - டைகர் கோவிந்தராஜன்

(டைகர்) கோவிந்தராஜன் 

 
எனக்கு கிரிக்கெட் ரொம்ப தெரியாது. ஆனால் கிரிக்கெட் சம்பந்த பட்டவர்களுடன் எனக்கு நட்பு கிடைத்தது நான் செய்த பாக்கியம் என நினைக்கிறேன். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க (த.நா.கி.ச) சில நிர்வாகிகளுடன் எனக்கு தொடர்பு 1997-98இல் ஏற்பட்டது. அதற்கு காரணம் எனது குரு, நண்பர், என்னுடன் வங்கியில் பணிபுரிந்த திரு வி.பி.கோவிந்தராஜன் அவர்கள். செல்லமாக விபிஜி என்றும்  ஹெட் என்றும்  எங்களாலும், த.நா.கி.ச. வட்டாரத்தில் டைகர் என்றும் அன்பாக  அழைக்கப் படுபவர்.

அவருக்கு டைகர் என பெயர் வரக்  காரணம் அவர் நடத்திய டைகர் கிரிக்கெட் கிளப். என்னிடம் அவருக்கு என்ன ஈர்ப்பு வந்தது என்று எனக்கு தெரியவில்லை. என் மீது அதீத வாஞ்சையும் நட்பும் கொண்டவர். உரிமையுடன் என்னை அவர் திட்டுவார். எனக்கு தெரியும் அதெல்லாம் எனது நன்மைக்காகதான் என்று. ஒரு கட்டத்தில் அவர் என்னை மரியாதையாக பேசினால் அன்று எனக்கு எதாவது அடி படும் அல்லது காயம் உண்டாகும்.

ஒருமுறை காலை அலுவலகம் சென்ற உடன் என்னை அவர் அழைத்திருக்கிறார். நான் கவனிக்காமல் இருந்திருக்கிறேன். சார்.. என்ன உங்களை கூப்பிட்டால் காதிலே விழாதா? என்று கூறவும் நான் என் சீட்டில் இருந்து எழுந்து அவரை நோக்கி சென்றேன். நான் எழுந்த அவசரத்தில் நான் அமர்திருந்த நாற்காலி அருகில் இருந்த ஸ்டீல் அலமாரி மேல் இடிக்க, அலமாரி மேல் இருந்த பழைய பாக்ஸ் பைல் தலையில் விழுந்து தலை புடைத்து விட்டது.

1999ல் எனக்கு அதிகாரியாக பதவி உயர்வு கிடைத்தபோது எனது பதவி உயர்வு கடிதத்தை எனக்கு கொடுக்க என்னை சார் என்று அழைத்தார். அவரை நோக்கி செல்லும் பொழுது அருகில் இருந்த ஸ்டூலில் கால் இடறி கட்டைவிரலில் ரத்தம் வந்து விட்டது. அதன் பிறகு அவர் என்னை சார் என கூப்பிடுவதையே விட்டு விட்டார். திரு வி.பி.ஜி. அவர்கள் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர். அதேபோல் சம்ஸ்க்ருதத்திலும் தேர்ச்சி பெற்றவர். நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர். நல்ல நண்பர். நல்ல மனிதர். முகத்துக்கு நேரே பேசும் சுபாவம் உள்ளவர். ஆரம்ப காலத்தில் அவரது இந்த வெளிப்படை தன்மை எனக்கு எரிச்சல் ஊட்டினாலும் அவரையும் அவரது சுபாவமும் புரிந்த பிறகு எனக்கு அது பழகி விட்டது.

1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் என்று நினைக்கிறேன். அலுவலகத்தில் மாலை 5.00 மணிக்கு வீட்டுக்கு செல்ல தயாராகி கொண்டிருக்கும் பொழுது விபிஜி அவர்களிடம்  இருந்து ஒரு போன். டேய் உடனே கிரிக்கெட் சங்கத்திற்கு வா. அவசரம். வேறு எதுவும் சொல்ல வில்லை. அப்போது தான் புதிதாக பறக்கும் ரயில் சென்னைக்கு வந்திருந்தது. சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகில் தான் நான் வேலை செய்த எங்களது வட்டார தலைமை அலுவலகம் இருந்தது. உடனே பறக்கும் ரயில் பிடித்து சேப்பாக்கம் இறங்கி கிரிக்கெட் சங்கத்திற்கு சென்றேன்.

அப்போது சங்கத்தின் செயலாளராக மறைந்த திரு அசோக் கும்பட் அவர்கள் இருந்தார். விபிஜி கும்பட் அவர்களின் அறைக்கு என்னை அழைத்துச் சென்று என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். யாரு இந்த பையனா? இந்த வேலைக்கு இவன் சரி படுவானா ? என கும்பட் அவர்கள் கேட்க இவரோ கரெக்டாக இருப்பான் சார் என் கூறினார். வடிவேலு காமெடியில் வருவது போல என்ன வேலை என்று அப்போது எனக்கு புரிய வில்லை. பிறகு விபிஜி அவர்கள் விளக்கிய பிறகு தான் எனக்கு தெளிவாக புரிந்தது.

அவர் சொன்ன வேலை என்னால் செய்ய முடியுமா? எனக்குள் ஒரு சின்ன சந்தேகம்... ஆனால் அவர் தந்த ஊக்கம் என்னை ஒத்துக்கொள்ள  செய்தது.

என்ன வேலை? மீண்டும் சந்திக்கும் பொழுது சொல்கிறேன்.....

No comments:

Post a Comment

உங்கள் விமர்சனம்/ கருத்துக்கள் அளித்து எனக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்